இசை, இளையராஜா, பெரியார்.

சமீபத்தில் வலைப்பூவில் வெகுவாக பேசப்பட்ட விடயம் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது. அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க இளையராஜவின் இந்த முடிவை ஆதயமாக்கி அரசியல் செய்ய முனைகிறது.

முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது.

பெரியாரை பின்பற்றுபவரும் சரி, அவரை எதிர்ப்பவரும் சரி அவரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே அடையாளப்படுத்துகின்றனர். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது விரிந்த தளம் கொண்டது. அவரின் கடவுள் எதிர்ப்பு என்பது
வேத அதிகார எதிர்ப்பே. இந்த மக்களை சாதியின் பெயரால் வர்ண அடுக்குகளில் வைத்து அடிமைப்படுத்திய வேதத்தை, வேத அதிகாரத்தை எதிர்ப்பதற்கு எடுத்த கருவியே.

தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார். அவர் அமைத்து கொடுத்த பாதைதான் நாம் இன்று ஓரளவேனும் வாழ்க்கையில் சுயமரியாதையோடு பயணிக்க வழி செய்திருக்கிறது. பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.

இளையராஜா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.


இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல

திரு.கா.காளிமுத்து மரணம்.



தமிழக முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், சிறந்த தமிழ்ப்பேச்சாளருமான திரு.கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணம்டைந்தார். திராவிட இயக்கங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.



இதுகுறித்த தட்ஸ் தமிழ்.காம் செய்தி
http://thatstamil.oneindia.in/news/2006/11/08/kalimuthu.html

தமிழகம்''50

இன்றோடு ஐம்பது ஆண்டுகளாகிறது. தமிழகம் மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு. நிலவியல் அடிப்படையில் சில நகரங்களை அண்டை மாநிலங்களிடம் இழந்த போதிலும்பெரும்பாலான பகுதிகளை தன்னிடமே வைத்திருக்கிறது. அதற்காக உழைத்த அத்துணை பெரியோர்களையும் நன்றியோடு இந்த தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

மொழிவழி மாகாணங்கள் அமைந்தது மிக எதார்த்தமானது. தேவையுமானது.
இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல. அது தேசங்களின் தேசம். வேறுபட்ட அதே சமயம் தனித்துவமிக்க தேசங்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு துணை கண்டம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் கூட்டமைப்பின் அடிப்படையாக கொண்டிருக்கிறோம்.

இந்திய தேசியம் ஒற்றைத்தன்மை உடையது என்று நாம் சொல்லுவோமாயின் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும்.
பல தேசியங்களை கொண்ட பன்மைத் தன்மை வாய்ந்தது.
இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் இந்த ஒற்றைத் தன்மையை திணித்துவிட முயற்சிகள் நடந்து கொண்டே வருகின்றது. அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இன உணர்வு என்பது சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. நமது நிலையை நோக்கும் போது அது நெருடலாகவே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் மாநிலம் சார்ந்த தேசிய உணர்வுகளை கொண்டிருக்கிறது. அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரம் அவர்களிடம் தம் மொழி சார்ந்த, நிலம் சார்ந்த தேசிய உணர்வு மிகுந்திருக்கிறது.

ஆனால் அதே உணர்வை தமிழகத்தில் கொண்டிருந்தால்???

உங்கள் பெயர்??

பிரிவினைவாதி!

ஏனிந்த நிலமை. தனக்கென தனிக்கொடியை வைத்திருக்கும் கர்நாடகத்தினரை யாரும் பிரிவினைவாதிகள் என்று சொல்வதில்லை. இந்திய தேசியத்தைவிட கர்நாடக தேசியத்தை அவன் பெரிதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போதும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. அவன் தன்னை கர்நாடகத்தானாகவே அடையாளப்படுத்துகிறான். கர்நாடகத்தானகவே இருக்கிறான். எந்த மத, சாதியினராக இருந்தாலும் அவனிடம் கர்நாடக தேசிய உனர்வே மேலோங்கி இருக்கிறது. தன்னை முதலில் கர்நாடகனாகவும் பிறகே இந்தியனாக அவன் உணர்கிறான். தன்னை இந்தியனாக உணர்திருந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பானா?

சொன்ன போதும் அவனை பிரிவினை வாதி என்று எவனும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழனாக அல்லாமல் இந்தியனாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மீதுமட்டும் ஏனிந்த திணிப்பு. மற்ற மாநிலங்களைப் போலத்தான இந்தியாவில் இணைந்திருக்கிறது. தேசிய உணர்வை அளக்க ஏன் இந்த வேறுபட்ட அளவீடுகள். தமிழனின் தேசிய உணர்வு மட்டும் ஏன் சோதனைகளுக்குட்படுத்தப்ப்டுகிறது. ஏன் இந்த சமத்துவமற்ற நிலை. சிந்தித்துப்பார்க்க வேண்டும். இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,
அவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.

வாழ்க தமிழ்!! வாழ்க தமிழ்நாடு!!


Link: Siva murugan blog :நிகழ்வுகள்: தமிழ்நாட்டுக்கு வயது 50

சிதம்பர ரகசியம்

*கோயில் எப்படி ''Private Property'' ஆகும்.??

கோயிஞ்சாமித்தனமா கேள்வி எல்லாம் கேட்கப்புடாது.
ஆண்டவனே அவங்களோட ''Private Property''யாத்தான் இருந்திருக்கிறார்.


இது புரியாம தீடிர்னு இப்படி குதிச்சா என்ன பண்றது. ஏதோ ஆறுமுகம் புண்ணியத்தில சிவனும் இப்ப லைம்லைட்ல வந்துவிட்டார். ஆனா இந்த கூத்துகளை எல்லாம் அவரின் திருவிளையாடலில் ஒன்றாகவேப் பார்க்கிறேன். சிவனின் இருப்பை தமிழகத்தில் யாரும் மறுதலித்து பேச முடியாது. மரபு ரீதியாக, இறையியல் நம்பிக்கை ரீதியாக, வரலாறு ரீதியாக என்று எந்த வகையில் பார்த்தாலும் தொடர்புடையவன். வெல்ல முடியதாததால் அவனும் அவனது தத்துவமும் உட்செரிக்கப்பட்வை. ஆரியமய(மா)க்கப்பட்டவன்.

ஆனால் அவன் சிவன் ஒரு தமிழன். நாகன். திராவிடன். எப்படி என்னான்னு சந்தேகம் வந்தா தமிழ்க்கடவுள் முருகனுக்கு அப்பனவன். கூடுதல் அத்தாட்சிக்காகத்தான் இதைச் சொன்னேன்.முருகன் அவன் பிள்ளை இல்லைனு சொன்னீங்கனாலும் எனக்கு வசதிதான். மொத்த ஆரியம் & வகையறாக்களுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு கிடையாதுனு எளிதா முடிச்சுகிடலாம்.

ஓடியாங்க ஓடியாங்க.

என்னை மொத்துவதற்கு. இறைவன் எங்கும் இருப்பவன். மொழி இன நில எல்லைகளை கடந்தவன் என ஒரு ஆன்மீகச் சொற்பொழிவும் நிகழ்த்திவிட்டுப் போங்கள். எல்லோரும் காதுகுளிர கேட்டு பக்திப் பரவசபிரவாகம் எடுக்கலாம். சரின்னு திருந்தி கோயிலுக்கு போறேன்னு சொன்னா மட்டும் உன் மனசுல அவன் இருக்கான் அங்கேயே கும்பிட்டுக்கனு சொல்லுவீங்க. ஆயிரமாண்டுகளாய் பக்திரசத்தில் நனைந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு முறை கேட்பதால் குடி மூழ்கிப்போய்விடப்போவதில்லை.

''சே சே இந்த இந்துமத விரோதிகளே இப்படித்தான்..''

கேள்வி எதுவும் கேட்டுவிட்டால் அவன் இந்து மத விரோதியாகிவிடுவான். உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒதுங்கிப் போக வேண்டியதுதானே? ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்று வியாக்கானங்கள் வேறு. என் மீது திணிக்கப்பட்டிருப்பதை நான் தான் கேட்கமுடியும். கடவுள் உண்டு. நீ நம்பிக்கை வைத்திருப்பவனே உன் இறைவன். ஆனால் அவன் மீது உனக்கெந்த உரிமையும் இல்ல. அவன் வேதங்களுக்கு கட்டுப்பட்டவன், வேதங்களைச் சொல்லும் எங்களுக்கு கட்டுப்பட்டவன் என்று சொல்பவனுக்கு பேர் இங்கு புனிதன்கள். மனம் புண்பட வேண்டுமென்றால் இந்த அவலத்தை கண்டுதான் புண்பட வேண்டும்.

ஆண்டவனும் சரி அவன் மொழியும் சரி அவர்களிடத்தில் சிறைப்பட்டு கிடக்கிறது. இதற்கெல்லாம் வருந்தாது மறத்துப்போயிருக்கும் மனிதர்களுக்கு கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் மனம் ரணப்பட்டு போகிறதாம். போகட்டுமே! அடிமைகளுக்கு இதனால் என்ன குறைச்சல் வந்துவிடுகிறது.

மக்களை அவர்கள் நம்பிக்கைகள் கொண்டே அடிமைத்தனம் செய்திருக்கிறான். தன் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஆயுதமாக மக்களின் இறை நம்பிக்கைகளையே பிரயோகிக்கிறான் அவனுடைய சம்பிரதாயங்கள் என்னும் ச(க)தி பூசி. அதை உடைக்க வேண்டுமானால் அந்த ஆயுதத்தை முதலில் பிடுங்கி எறிய வேண்டும்.ஈரோட்டுக்கிழவன் செய்ததும் அதைத்தான்

ஆனால் நாமெல்லாம் அவர்களிடத்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. குறிப்பாக அரசு அதிகாரம். இந்த பாடத்தை நிச்சயம் அவர்களிடமிருந்து பயின்றே ஆக வேண்டும். நாட்டுக்கரசன் வேந்தன். வேந்தனுக்கரசன் இறைவன். இறைவன் இவர்களளின் சிறைப்பறவை.
அரசன், அவன்குடி மக்கள் எல்லாம் சிறைப்பறவைகள். சுருக்கமா சொன்னா அடிமைகள். ஆனால் நேரடியாக எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால் இதை எப்படிச் சாதித்தான். நம் நம்பிக்கைகள் பெயரலேயே. நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் மூலம் எதையும் செய்யலாம். அது சட்டப்படியானதாகி விடுகிறது. நீதி ஒன்றுதான். அநியாயங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய். ஆனால் சட்டப்படி செய். தண்டனை கிடையாது.மறைந்திருக்கும் மாய நூலினால் நம்மை கட்டி வைத்திருப்பான்.


அரசன் தம்மை ஆண்டு கொண்டிருப்பதாக மக்கள் நினைத்திருக்க அரசனை அந்தணன் ஆண்டு கொண்டிருக்கும் அவலம் மறைக்கப்பட்டிருக்கும். அவனது தேவைகள் ஆண்டவன் பெயரால் அரசுச் சட்டங்களாகப்பட்டன. மக்களுக்கெதிராக இருப்பினும் போராட முடியாது. ஏனென்றால் நீங்கள் சட்டத்தை மீறுகிறவராகிவிடுகிறீர்கள். தண்டனைக்குரியவராகி விடுவீர்கள். அத்தனையும் முறைப்படி நிகழும். சட்டம் என்பதும் விதிகள் என்பதும் மக்களுக்கானதாக இருப்ப்பதற்குபதில் ஒரு குழுவின் விருப்புகளின் பால் அமைந்ததுவிட்டது.

இவர்களுக்குள் மறைந்திருக்கும் நியாய உணர்வு வ்வப்போது வெளிவரும். சமீபத்திய உதாரணம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது பெருக்கெடுத்து வரும் பார்ப்பனியத்தின் கரிசனம்.பாய்ந்தோடிவரும் பாச உணர்ச்சி. பிற்படுத்தப்பட்டவர்களால் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை மறக்கவியலாகாது. ஆனால் இதினல் பார்ப்பனியத்தின் பங்கை மறைத்துவிட்டு பேசமுடியாது. பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட இனங்கள் என்பவைகளே வர்ணாசிரமத்தின் விளைபொருட்கள்தானே. அடுக்குமுறை சொல்லும் தத்துவ விச விதையை எடுத்தெறியாமல் களைகளை மட்டும் களைந்து என்ன பயன். விச விதைகள்தான் களைகளை நீக்குவதற்கு உதவுவதாக வேடங்கட்டிக் கொண்டு வருகிறது.

ஒரு பழமொழி உண்டு.

யோக்கியர் வர்றார். செம்பை எடுத்து உள்ளே வை என்று.

நேர்மையையும், நியாயத்தையும் தர்மத்தையும் பற்றி பேச இந்த சகுனிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களின் பொதுக்குரல் என்பதையே தன எண்ணத்தின் பிரதிவடிவங்களாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு .

சிதம்பரம் கோயிலில் நடைபெற்றது ஒன்றும் ஆச்சர்யம் அளிக்கவில்லை. இவ்வளவு நாள் வாய்மூடி இருந்த சமூகம் இன்று கேள்வி கேட்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.
**
அப்புறம் ''சட்டப்படி''

இந்த வார்த்தைகளின் பின்னிருக்கும் அரசியலைத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் முழுமூச்சாக இறங்கக்காரணமும் இந்திய மக்களின் மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்த சட்டப்படியான உரிமத்தைப் பெற வேண்டும் என்ன ஆவல் என்பதை மறுக்கமுடியாது. தங்களது அதிகாரத்தை ஒரு திரண்ட நிலப்பரப்பின் மீது செலுத்த வாய்ப்பு வரவிருப்பதை உணர்ந்தபோது அதற்காக அவர்கள் உழைத்தது எதார்த்தமானது. சுதந்திரத்தின் பெயரால் கிடைக்கவிருக்கும் அந்த அதிகாரத்தின் மூலம் தங்களது தேவைகளை, சட்டங்களாகிவிட்டால் எந்த நாளும் கவலை இல்லை. ஏனென்றால் அதை எதிர்ப்பவன் அரசியல் சட்டத்தை எதிர்ப்பவனாகிவிடுவான் அல்லவா. ஆனால் என்ன செய்ய அவர்களின் துர் அதிர்ஷ்டம் அம்பேத்கார் என்னும் வடிவில். அம்பேத்கார் இல்லாவிட்டால் இந்தியச் சட்டம் என்பது மனுதர்ம சட்டமாகாத்தான் ஆகியிருக்கும். இவர்களின் அயோக்கியத்தனங்கள் எல்லாம் சுதந்திரப்போராட்ட ஜமுக்காளத்தால் போர்த்தப்பட்டன. இந்த உண்மைகளை உணர்ந்து எதிர்த்தவர்களுக்கு சுதந்திர போராட்டத்தின் எதிரிகள், அந்நிய அரசின் நாட்டின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதே அரசாங்கத்தின் எல்லா சுகங்களையும் பெரும்பகுதி இவர்கள் அனுபவித்ததும் மட்டும் மறைக்கப்பட்டது. அதே உத்திதான் இன்று இவர்கள் எல்லாம் தேசபக்த புனிதர்களாகவும் இவர்களின் அதிகார அரசியலை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று பட்டம் கட்டப்டுவதைப் போல.

நீதிமன்றங்கள்...

மன்னுச்சுக்குங்க! அது மனுநீதிமன்றங்களாத்தான் இருக்கு.

ஏதோ பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் வந்தால் சாதிப்பாசத்தில் நீதியை வழுவ விட்டுவிடுவார்களாம். இவர்கள்தான் எல்லாவற்றையும் காக்க வந்திருப்பவர்கள். சுப்பனும் குப்பனும் நீதிகேட்டு வந்தால் இறுகிய மனதோடும் கடுமையாக நீதியை நிலைநாட்டும் இந்த கோமகன்கள் ஜெயலலிதா, வேணுகோபால் போன்றவர்களுக்கு மனசாட்சிப்படி பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் இளகிய மனதோடு பிரசாதம் வழங்குவது எல்லாம் எந்த பாசவகையில் வருகிறது என்பதை நாமேதான் புரிஞ்சுக்கணும்.
இருக்கிறவனுக்கொரு நீதி இல்லாதவனுக்கொரு நீதின்னு பல்லிளிச்ச பின்னாடி என்ன மரியாதை வேண்டி கிடக்கு.


பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவிட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசியம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

வாழ்த்துகள் கலைஞர்....

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தமைக்காக நன்றிகளும் வாழ்த்துகளும்....

என் பார்வையில் 2006 தேர்தல் முடிவுகள் - 1

தேர் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதுபோல் போட்டி கடுமையாக இருந்தாலும் முடிவு தெளிவாகவே வந்திருக்கிறது. தமிழக அரசியல் அடுத்தகட்ட பரிணாமத்தில் வந்திருக்கிறது. கடந்த நூறாண்டுகால வரலாற்றில் தமிழக மக்கள் பல்வேறு வித்தியாசமான அரசியல் தீர்ப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிகஅற்புதமான ஒரு தீர்ப்பாக இதைப் பார்க்கிறேன். தனிக்கட்சி ஆட்சி என்ற நிலையிலிருந்து கூட்டணி தயவிலான ஆட்சி என்று மாறியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளை கொஞ்சம் நிதானமாக ஆராயாலாம் எனும் பேராவல் எனக்குள் எழுந்திருப்பதாலே இந்தப்பதிவு..

அதனால் கொஞ்சம் பழையவைகளைப்பற்றி பேசிவிட்டு பிறகு இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைப் பற்றியும்பேசலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியதின் காரணமாக காங்கிரஸ் ஆரம்பத்தில் தமிழகத்தில் வலுவாக இருந்ததும், திரு.காமராஜர் போன்றதொரு மக்கள்தலைவர் ஆட்சி செய்ததன் பயனாக சுதந்திரத்திற்கு பிறகான முதல் 20ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. காங்கிரஸிற்கு வலுவான மாற்று இல்லை என்று எக்களித்து கொண்டிருந்த வேளையில் பேரறிஞர் அண்ணாத்துரை தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு திமுக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் தனக்கேற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் பயின்று இழந்ததை ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக இலகுவான கூட்டணிச் சவாரியை தேர்ந்தெடுதது. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிய மக்களின் விருப்பமும் தேர்வும் திமுக, எம்ஜிஆர் என மாறியது. மாநிலத்தில் காங்கிரஸின் ஆளுமையும் தகர்ந்து போனது. ஆனால் தங்களுக்கிருந்த குறிப்பிடத்தக்க அளவிலான பாரம்பரிய மக்கள் செல்வாக்கை மிகச்சரியாக பயன்படுத்தி கூட்டணிகள் அமைத்து சவாரி செய்தனர். மத்தியில் ஆட்சியில் இருந்தாலே போதும் என்ற மனோபாவமும், காமராஜருக்கு பின் சுயபுத்தி உள்ளவர் எவரும் தமிழக காங்கிரஸிற்கு வாய்க்காமலே போனதாலும் மத்தியில் அரசாண்டால் போதும் என்று தேசியப்பற்றை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்திய தேசியத்தில் ஒன்றினைந்திருந்தாலும் தொடக்கத்திலிருந்தே தமிழகம் அதற்குரிய மரியாதையையோ, அங்கீகாரத்தையோ பெறவில்லை.மாற்றந்தாய் மனப்பான்மையுடனே நடத்தப்பட்டிருக்கிறது. அதற்குரிய கடுமையான எதிர்வினைகளை தமிழகம் பதிவு செய்திருந்த போதிலும் முற்றிலுமாக எதிர்த்துவிட முடியவில்லை. தேர்தல் அரசியலில் அது முடியாது என்பதும் எதார்த்தமான உண்மை. யாராக இருப்பினும் ஜனநாயக ரீதியில் தேர்தல் அரசியலில் பங்கு பெறும் போது விரும்பியோ விரும்பாமலே சிலவகையான சமரசங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. தேர்தல் அரசியல் என்பது இருமுனைக் கத்தி. குறிப்பாக கொள்கை சமரசங்களுக்கு வெற்றியை பரிசாக தரும் விநோத கத்தி.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்திருந்த பின்பு மக்களுக்கான அரசியல், அவர்கள் பிரச்சனைகள் அதற்குண்டான தீர்வுகள் என்னும் தளத்தை விட்டு தனிமனித ஆதரவு/எதிர்ப்பு அரசியலாக உருமாறிவிட்டது. இதன் பலன் தனிநபர்களுக்கு. இழப்பு மக்களுக்கு! தொடர்ந்து பலகாலமாக ஏமாற்றமடைந்த மக்கள், தங்களுக்கு நேர்ந்த இழப்புகளை உணரத் துவங்கிய போதுதான் மாற்று இயக்கங்களுக்கான விதை தூவப்பட்டது. தாங்கள் வஞ்சிக்கபடுகிறோம் என்பதை பலர் மிகத்தாமதமாகவே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதைத் தீவிரமாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்தது. அதைப் பெற அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பதும் மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கிறதென்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய அரசு அதிகாரச் சமூக அமைப்பில் ஒரு அரசியல் சக்தியாக, அதிகார சக்தியாக உருவெடுக்காமல் தங்களுக்குத் தேவையான எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை புரிந்து கொண்டு அரசியல் தடத்தில் கால்பதிக்க முனைகிறார்கள். பல்வேறு போராட்டங்கள், அடக்குமுறைகளுக்காட்படுதல், இழப்புகள், தோல்விகளுக்கு பின்னரே அவர்களால் கால்பதிக்கவே முடிகிறது. அரசியல் சக்தியாக உருவெடுத்த பின்பும் ஆனால் அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடிவதில்லை. அதற்கும் பல இன்னல்கள் வருகிறது தேர்தல் அரசியலினால். ஆனால் விந்தை அதிகாரம் பெற தேர்தல் அரசியலைத் தவிர வேறு வழியும் இல்லை.
**

தொடரும்

அதிகார உரையாடல்களை உடைப்போம்

அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால். உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில்.

நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.

எனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான மொழியை, உரையாடலை உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழி என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைக்கலாம்.

இந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தியிருக்கிறது, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.

இன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.

ஆமாம்.

இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.

காலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.

இந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னுறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கியதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை மட்டும் வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்

இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் யாரும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.

அடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது.

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.

ஆகையால் இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று மாற்று உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.

தேர்தல் பிரசாரம்: பழ. நெடுமாறனுக்கு அனுமதி

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார் பழ. நெடுமாறன். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந் நிலையில் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வரும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் செய்ய தான் விரும்புவதாகவும், இதற்கு வசதியாக தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நெடுமாறனின் கோரிக்கையை ஏற்று அவரது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
இருப்பினும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசவோ, பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நிபந்தனை தளர்த்தப்பட்டதையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
**நன்றி- தட்ஸ்தமிழ்.காம்**

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே

தமிழகத்தில் பெரியாரும் அவரது தாக்கம் இன்னும் குறையாதிருப்பது பலருக்கு எரிச்சலைத் தருகிறது/தந்துகொண்டிருக்கிறதும். மனிதனின் இயற்கையான கடவுள் பக்தியைக்கூட இன்று தங்கள் சுயநல உணர்வுகளுக்காக உருமாற்றுதலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரியாரைப் பற்றிய திரித்தல்களில் ஒன்று அவரது மனைவி இறந்த போது அவர் மகிழ்ந்தவர். அத்தகைய கீழான எண்ணம் கொண்டவர் என்று நிறுவ படாதபாடு படுகிறார்கள். நாகம்மையாரின் மறைவு பெரியாருக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவரரே பதிவு செய்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாகம்மையார் மறைந்த மூன்று நாட்கள் கழித்து ''குடிஅரசில்'' அவர் எழுதிய தலையங்கத்தின் சில பகுதிகள்..(14.5.33)

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே..

''எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி ஆவி நீத்தார். நாகாம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை...

நான் சுயநலவாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாக', இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.

நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்

''--- கடந்த 2,3 வருசங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும்( சங்கரச்சாரிகள் போல - ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்கவேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திரவாசமோ இருப்பது கூடாதென்றூம் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்''
*
இதுதான் பெரியார்... வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்த உண்மையான மகாத்மா.. தன் இழப்புகள் கூட மக்களுக்கான தன் பயணத்திற்கு ஒரு வசதி என்று நினைத்தவர் பெரியார். அதைத் திரிப்பவர்களெல்லாம் வக்கிரங்கள் பீடிக்கப்பட்ட மனநோயாளிகள். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பதே என் அவா
**நன்றி**
குடி அரசு 14.5.33
''ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்''- என்.ராமகிருஷ்ணன்

கனவு மெய்ப்படவேண்டும்


வாக்களிப்பீர்!! வெற்றி பெறச்செய்வீர்!!!

மதுரை - 1

மதுரை

வடக்கு கோபுரம்

ஆயிரங்கால் மண்டபம்



பொற்றாமைரைக் குளம்



அமீரகத்தில் ''தை'' வெளியிட்டு விழா.




துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக, அண்ணன் அறிவுமதி அவர்களால், தமிழுக்காகவும், தமிழர்களின் இலக்கியங்களை பதிவு செய்வதற்காக, தொடங்கப்பட்டிருக்கும் ''தை'' கவிதைக் காலாண்டிதழ் அமீரகத்தில் வெளியிடப்பட இருக்கிறது. அமீரகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் பங்கேற்க இந்த நிகழ்ச்சி வருகிற 09.03.2006 வியாழன் இரவு 8.00 மணி அளவில் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் பவன் அரங்கில் நடைபெற இருக்கிறது.

அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் தலைவர் திரு.அப்துல் கதீம் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் அனைவரையும் இந்த விழாவிற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

''தை'' கவிதைக் காலாண்டிதழ் குறித்த அறிமுகம் நக்கீரன், கீற்று, வார்ப்பு ஆகிய இதழ்களில் ஏற்கனவே வந்திருக்கிறது. நண்பர்களின் பார்வைக்காக
http://www.nakkheeranbiweekly.com/ (இலக்கியம் நக்கீரன்)
http://www.keetru.com/literature/essays/thai.html
http://www.vaarppu.com/php/book_intro.php

மேலும் தொடர்புகளுக்கு:
இ.இசாக்: 050-3418943, நண்பன்:050-8497285, கவிமதி:050-5823764, முத்துகுமரன்:050-6243115, ந.தமிழன்பு:050-8802541

பீயள்ள வருகிறார் சுஜாதா

தன்னையும் தலித் இலக்கியவாதியாக கருத வேண்டும் என்று கூறிய சுஜாதாவிற்கு எழுத்தாளர் அழகியபெரியவன் தலித்முரசில் எழுதி இருக்கும் கட்டுரை http://www.keetru.com/dalithmurasu/feb06/azhakiya_periyavan.html

அந்தமானைப் பாருங்கள் அழகு











ஒரு கூட்டுக் கிளியாக


நன்றி: திணமணி.காம்

சேரனின் முத்தையாவும் என் முத்துவும்:


இந்த பதிவு என் அம்மா அப்பாவிற்காக.......




நச்சுப் புகைகளுக்கு மத்தியில் சுத்தமான காற்றை சுவாசித்தது போல, புட்டிப்பாலுக்குப் பதில் தாய்ப்பால் குடித்தது போன்ற திருப்தியை தந்தது சேரனின் ‘’தவமாய் தவமிருந்து’’. நேற்று முன் தினம் இரவுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.. பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டின் தனிமைச் சுழலில் பார்த்தது இன்னும் அதிகமான தாக்கத்தை என்னுள் எழுப்பி இருக்கிறது. மூன்று மணி நேரம் என் வீட்டிற்குள் இருப்பது போலவே இருந்தது. முத்தையாவிற்குள் பலமுறை என் அப்பா முத்து வந்து விட்டுப் போனார். கடந்த வந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையில் கண்ட போது கண்களில் நீர் முட்டி நின்றதை தவிர்க்க முடியவில்லை. திரைப்படங்களில் எதார்த்த வாழ்வில் நிகழவியலா எத்தனையோ புனைவுகளை பார்த்து சலித்திருந்த கண்களுக்கு, உண்மையை காணும் வாய்ப்பு கிடைக்கச் செய்த சேரனுக்கு நன்றி.

சேரன் படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லியிருந்தார். இந்த படத்தின் முத்தையா பார்க்கும் ஒவ்வொருவரின் தந்தையாகவே காட்சியளிப்பார் என்று. நூறு விழுக்காடு சரியே. படத்தை பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே வந்து விட்டன. அதனால் அதைப்பற்றி நீட்டி முழக்கப்போவதில்லை. இதுவும் குறைபாடுகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான். அவைகளும் ஏற்றுக்கொள்ள கூடியவைகளே. சேரன் தேர்ந்தெடுத்த கதைக்களம் அற்புதமான ஒன்று. மனித உறவுகளை படிப்பதுதான் வாழ்வின் உயர்ந்த படிப்பாக இருக்கும். அந்த வகையான தேடல்களோடு இந்த படத்தின் ஊடாக பயணித்திருக்கிறார். படத்தை பற்றியான விமர்சனங்களுல் ஒன்று நீளமாக இருக்கிறது. காட்சிகளை இழுத்திருக்கிறார். கதைநாயகன் இறந்த பின்பும் படத்தை முடிக்க மனமில்லாமல் இழுத்திருக்கிறார். உறவுகளை நாம் எப்போதும் அறிவுப்பூர்வமாக அணுகுவதில்லை. உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒன்றல்ல. எல்லாவித ஏற்ற இறங்களோடுதான் செல்லக்கூடியவை. நம் வாழ்விலே நாடகத்தனமாய் பல நிகழ்வுகளை நடத்திக்கொண்டே திரையில் வருவதை நாடகத்தனம் என்று சொல்லிக் கொள்கிறோம். மார்புப் பிளவுகளையும் இடுப்பின் வளைவுகளையும் நீண்ட நேரம் இடம் பெறுவதை எதிர்பார்க்கும் மனம் பெற்றோர்களுடனான உரையாடல்கள் நீண்டுவிட்டதற்காக விமர்சனம் என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கிறது. இந்தப்படத்தில் சேரன் சரியாக கையாளத பகுதி என்பது சென்னை வாழ்க்கைதான். அங்குதான் அவர் தடுமாற்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கதையின் நாயகர்களின் மீது கழிவிரக்கம் உண்டு பண்ணுவதற்காக அவர் அமைத்திருந்த காட்சிகள் சரியானதாக இல்லை. வெளிப்பட்ட விதத்தில்தான் அங்கு குறை இருக்கிறதே தவிர அவரின் சிந்தனை சரியான தளத்திலே சென்றிருக்கிறது. இதை பின்பு தொடர்கிறேன்.



ஒரு நடுத்தரவர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி இருந்தார்ராஜ்கிரன். நந்தா திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பின் ஆளுமை தெரியவந்தது. இந்த படத்தில் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் மாறும் முகபாவங்கள், அதை வெளிப்படுத்தும் வகையில் அவரது உடம்பின் ஒவ்வொரு பாகங்களுமே நடித்துள்ளன. சொல்ல்லிக் கொண்டு போனால் படம் முழுவதும் சொல்லிக் கொண்டு போகலாம்.

என்னை கரைத்த காட்சிகள் சில..

தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுமோ ஒன்று உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் பொழுது வரும் தொலைபேசி அழைப்பு, அதைத் தொடர்ந்து இளவரசுவை அழைக்க ஓடும் காட்சி...

சுற்றுலா செல்லமுடியாத ஏக்கத்திலிருக்கும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டும் காட்சி, குறிப்பாக முயல் பிடிக்கும் காட்சி...

படிக்க வைப்பதற்காக கடன் கேட்டு நிற்கும் காட்சி
...

கல்லூரியில் சேர்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்துவிட்டு வரும் அந்த காட்சி
இந்த காட்சியை கண்ட போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 1997 வருடம் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக என் தந்தை அலைந்து கொண்டிருந்த நேரம், கையில் எந்த வித சேமிப்பும் கிடையாது. அரசுப்பணி, ஒற்றை வருமானம்தான், வட்டிக்கு வாங்கித்தான் எல்லாமே செய்யக்கூடும் என்ற நிலை, சொந்தக்காரர்கள் எல்லோரும் அறிவுரை சொன்னார்கள் அகலக்கால் வைக்காதே, படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கடங்காரனா ஆகி நிக்காதே என்று அறிவுரைகள், எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னை படிக்க வைத்தார். அவருக்கு முதலில் நம்பிக்கை கொடுத்தது அம்மா. என்ன செல்லம்( அம்மாவை அப்பா இப்படிதான் அழைப்பார்) செய்யலாம் என்று கேட்டபோது தாலிக்கொடியையும், காதில் போட்டிருந்து தோடு, மூக்குத்தியை தவிர்த்து அத்தனை நகைகளும் எடுத்து அப்பாவிடம் கொடுத்து இதை அடகு வைத்து முதலில் பணம் புரட்டிட்டு வாங்க என்று சொன்னார். நான் துபாய் வந்த பின்புதான் அது மறுபடியும் என் அம்மாவிடம் திரும்ப வந்தது. வாங்கும் கடனுக்கு வட்டி, வைத்த நகைக்கு வட்டி, கெடு முடிந்தவுடன் பணம் புரட்டி திருப்புவது பின்பு மறு அடகு வைப்பது என ஓடிய எட்டாண்டு வாழ்க்கை அது. முத்துவோ, முத்தையாவோ, அவர்களுக்கு முதுகெலும்பாய் இருப்பது முத்தம்மாளும், சாரதாக்களும் தான்.

ஆனால் நாம் இன்று முத்தையாவை பற்றியாவது பேச ஆரம்ப்பித்து இருக்கிறோம். ஆனால் அதில் சமபங்கு உழைத்த சாரதாக்களின் தியாகங்களை சரியான அளவில் உணர்ந்திருக்கிரோமா என்பது கேள்விக்குறிதான். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் அம்மாவிற்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டது கிடையாது. அம்மாவின் தேவைகள் என்ன என்று ஒருமுறை கூட சிந்தித்தது கிடையாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த கேள்விகள் என்னை துளைத்து எடுத்துவிட்டன. நம் சமூக அமைப்பு நம்மை அந்த அளவில்தான் வைத்திருகிறது. இது போன்ற சூழல்களில் நம் தாய்மார்களின் குடும்ப நிர்வாகம் எத்துனை திறமையானது. பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதம், தன் சக்திக்குட்பட்டு வருவாயை பெருக்க அவர்கள் செய்யும் போராட்டங்கள், அவை எதுவுமே கவனம் பெறாமலே போய்விடுகிறது. படத்தில் ஒரு காட்சி காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் வாங்கிச் செல்லும் காட்சி, பையனின் படிப்பிச் செலவிற்கு வேண்டுமென்று தோடும் அடகு கடைக்கு போய்விடும்.தன் கணவன் சைக்கிள் இல்லாவிட்டால் எவ்வளவு சிரமப்படுவான் என்பதை உணர்ந்து கணவனையும் குழைந்தையாக்கி பார்க்கும் அந்த இடம் தாய்மையின் உன்னதத்தை சொன்ன இடம். எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன். நானும் சில வேளைகளில் என் மகிழ்விற்கென பணம் கேட்ட போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றைத்தானே அடமானம் வைத்து அனுப்பி இருப்பார்கள்??

அதே மாதிரி வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களை திசைமாற வைக்கக்கூடியது காதலும் காமமும். அதை மிகச் சரியாக எடுத்தாண்டிருந்தார் சேரன். ஏனென்றால் வளரத்துடிப்பவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றக்கூடியவை இந்த உணர்வுகள். இது இரண்டைப் பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த உணர்வுகளை சரியான வகையில் கையாளத்தெரியாமல் தடுமாறுவது உண்டு.இதை சரியான முறையில் சொல்லியிருந்தார் சேரன். பாவம் குஷ்பு போன்ற அம்மாக்கள் வசந்திகளுக்கு இல்லைததால்தான் இத்தனை பிரச்சனை. காமம் என்பது வெறும் உடல் இச்சை தீர்ப்பதோடு முடிவதில்லை. அது பல்வேறு சூழல்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிக்கலை சொல்வதில்தான் சற்று மிகைப்படுத்தி விட்டார். சென்னையில் அவர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதில் கொஞ்சம் தடுமாறி விட்டார். ஒரு சில நிமிடத் தவறுகள் வாழ்வின் திசையை எவ்வளவு தூரம் மாற்றக்கூடியது என்று சொல்ல முயற்ச்சித்தது ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பொறுப்பான செயல். அந்த வகையில் சேரனை இளைஞர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்.

சரண்யாவின் சிறந்த நடிப்பிற்கு சேரன் தன் குழந்தையை அவர் கால்மாட்டில் வைக்கும் காட்சி.பச்சப்ப்பிள்ளையின் அழுகை அவருக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கிள்ள தன் வைராக்கியத்தை காப்பாற்ற முனைந்து முடியாமல் உடைந்து பிள்ளையை தூக்குவாரே.கண்ணீர் பொத்துக்கொண்டு வந்து விட்டது. இந்த இடத்தில் மனம் அப்படியே லேசாகிப்போனது. சீக்கிரம் குழந்தையை தூக்கவேண்டும் என்று மனம் துடிக்கவைத்தைருந்தது அற்புதமான காட்சி.

சேரன் மதுரையில் வீடு பார்த்திருப்பதை தெரிவிக்கும் காட்சி, அந்த இடத்தில் ராஜ்கிரனின் சிரிப்பு எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது. மே 31 2004 அப்பா பணி ஓய்வு பெறுகிறார். எனக்கு துபாயில் வேலை மே 18ம் தேதி கிடைத்தது. அவரது பணிக்காலத்தின் கடைசி பன்னிரண்டு நாட்களை மிக மகிழ்வோடு கழித்தார். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது 8 வருசத்தக்கப்புறம் இப்பதான் நீங்க சிரிச்சு பாக்குறோம் சார்ன்னு. பணி ஓய்வு விழாவில் இதைக் குறிப்பிட்டு சொன்ன அப்பா கடைசி பத்து நாளாத்தான் நான் நிம்மதியா தூங்கிறேன். அதுக்கு ஆண்டவனுக்கு நன்றி. எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான் பெருமையோடு சொன்னப்ப எனக்கு பேசுறதுக்கு வார்த்தையே இல்லை. அப்போது அவர் கண்ணீரோடு சிரித்த சிரிப்பு இருக்கிறதே என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அதே மாதிரியான உணர்ச்சியை ராஜ்கிரன் வெளிப்படுத்தி இருந்தார்.

அதே மாதிரி என் அம்மா கல்லூரியில் என்னை சேர்க்க வந்திருந்தது. அதுவரை வீட்டை விட்டு பிரிந்ததே இல்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் இருவருக்கும் என் மேல் ரெம்ப பிரியம். அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பிரியம். நான் மதுரையில் பிறந்தேன். அப்பா அப்போது திருவரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். தினமும் என்னை பார்க்க திருச்சியிலிருந்து மதுரைக்கு வருவாராம். நான் குறை மாதப்பிள்ளை(7 மாதம்) என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் வேறு. அந்தவகையில் அவர்களுக்கு என் பிரிவு மிகவும் கனமானது. கல்லூரியில் விட்டு ஊருக்கு கிளம்பும் போது அம்மா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தவமாய் தவமிருந்த்தில் இதே காட்சி வந்த போது எனக்கு தெரிந்தது சரண்யா அல்ல என் அம்மாதான்.

படம் நெடுக ராஜ்கிரனை பிடித்தாலும் நான் மிகவும் ரசித்தது சென்னை வீட்டில் வந்து அவர் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சி.. வருத்தம், ஏமாற்றம், இயலாமை என அத்தனைக்கும் மவுன சாட்சியாய் அமைந்திருக்கும் காட்சி அது.



படத்தில் இசை மிகப் பெரிய குறை. பல நேரங்களில் மனசு மொட்டை இருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது.

படத்தின் சின்ன சின்ன குறைகள் கிளறிவிடப்படிருந்த உணர்ச்சிக் குவியல்களின் முன்னால் ஒன்றுமில்லாதது போலவே இருந்தது. காட்சிகள் நகங்கள் என்றால் சேரன் நறுக்கி எறிந்திருப்பார். ஆனால் எல்லாம் ரத்தமும் சதையாக இருப்பதால்தான் கத்திரிக்க முடியாமல் தவித்து விட்டார். இது போன்ற முயற்ச்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பிழந்து இயந்திர சூழலில் வாழத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் நாம் நம் வேர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அந்நியன் போன்ற கழிவுகளுக்கு மத்தியில் இது மிகவும் அவசியத் தேவையாய் இருக்கிறது. கழிவுகளை பிரம்மாண்டங்கள் மூலம் சந்தனமாக பரப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் சேரன் போன்ற படைப்பாளிகள் வெற்றி பெறுவது நம்பிக்கை தருகிறது.

தர்மபுரி பேருந்து எரிப்பு - என் எண்ணங்கள்

உயிர்கள் கருக்கப்பட்டு
ஆண்டுகளாகிவிட்டது
ஆறு
கர்ப்பப்பைகளின் ரணங்களோ
இன்னும்
ஆறாததாய்த்தான் இருக்கிறது
*

கோவை வேளாண்கல்லூரி மாணவிகள் தர்மபுரி இலக்கியம்பட்டியில் எரித்து கொள்ளப்பட்ட அந்த தருணத்தில் நான் தர்மபுரியில்தான் கல்லூரியில்(சப்தகிரி பொறியியல் கல்லூரி) படித்து வந்தேன். பெரும்பாலும் ஒரு நேரத்தோடு கல்லூரி முடிந்துவிடும். அன்றும் அதே போலத்தான் அன்றும் மதியமே கல்லூரி முடிந்துவிட்டது. நான்கு ரோட்டுக்கருகில் அந்த கல்லூரி பேருந்துகள் நிறுத்தப்பட்டு எல்லோரும் மதிய உணவுக்கு சென்றீருந்தார்கள். நாங்களும் அந்த பேருந்தின் வண்ணத்தை கிண்டலடித்து கொண்டு சென்றோம். அப்போது யாருக்கும் தெரியாது, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு கொடுர சம்பவம் நடக்கபோகிறதென்றுநாங்கள் வழக்கம் போல கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். மாலை நான்கு மணி அளவில்தான் விசயம் தெரிந்தது. உடனே எல்லோரும் இலக்கியம்பட்டிக்கு சென்றோம். விவசாயக் கல்லூரி மாணவர்கள் மிகவும் கோபத்தோடும் ஆத்திரத்தோடும் இருந்தனர். அங்கிருந்த போலிஸாரும் வெளி மாணவர்கள் யாரையும் அவர்களோடு பேச அனுமதிக்கவில்லை. எப்படியோ ஒரு கட்டத்தில் தர்மபுரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் அவர்களை நெருங்கிவிட்டோம். பிறகு மாணவர்கள் எல்லோரையும் போலிஸார் அனுமதித்து விட்டனர். யாரும் அறிந்திருக்கவில்லை நாலாபுறமும் காவல்துறை குவிக்கப்பட்டிருப்பது. இருபது நண்பர்கள் மனிதச் சங்கலிபோல எரிக்கப்பட்ட அந்த பேருந்தைச் சுற்றி போலிஸார் நெருங்காவண்ணம் நின்று கொண்டோம்.நேரமாக ஆக பதட்டம் கூடிக்கொண்டே போனது. எல்லோரின் மனதில் அடங்காத கோபம் மட்டும் இருந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேண்டும், அப்போதைய முதல்வர்கலைஞர் வரவேண்டும்( அது அதிகப்படியான எதிர்பார்ப்பு என்பது இப்போது உணர முடிகிறது), குற்றவாளிகளை தப்பிக்க விடாமல் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். மாவட்ட ஆட்சித் தலைவரும் வந்தார், மாணவர்களோடு பேசினார். யாரோ ஒரு மாணவன் ஆட்சித்தலைவரின் மேல் விழ காவல்துறையினர் உடனே மாணவர்களைத் தாக்க ஆரம்பித்தனர். எல்லோரும் நாலாபுறமும் சிதறி ஓடினாலும் அவர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. பேருந்தைச் சுற்றி நின்ற நாங்கள் எங்கள் கைகளை இறுகபிடித்துகொண்டுஎன்ன நடந்தாலும் கலையக்கூடாது என்று நின்றோம். ஆனால் ஓடி வருபவர்கள் எங்கள் மீதும் விழ ஆரம்பிக்க அச்சம் வந்துவிட்டது. நாங்கள் தப்பிக்க வேண்டுமானால் அருகிலிருந்த சாக்கடையில் குதித்துதான் தப்ப வேண்டும் என்ற நிலை. போலிசாரும் வேகமாக தாக்கவேறுவழியின்றி குதித்தோடி தப்பினோம். சிலர் மேல் ரப்பர்குண்டுகள் உரசிச் சென்றன. அன்று மாலை அந்தப்பகுதியே போர்க்களம் போல இருந்தது. அரசு மருத்துவமனையை ஒட்டியிருந்த கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டன. ஒரு சில தொலைபேசி கடைகளை வலிய திறக்கச் செய்துவீட்டிற்கு தகவல் சொன்னோம். அடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் விவாதித்தோம். மறுநாள் நான்கு ரோடு சந்திப்பில் கூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. மறுநாள் மாணவர்கள் எல்லோரும் கூடினோம். ஏறத்தாழ நூறு பேருக்கு மேல், மாணவிகளும் இதில் அடக்கம். அப்பொது அரசியல்வாதிகள் பலரும் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று வந்தார்கள். இதை மாணவர்களே பார்த்து கொள்கிறோம், அரசியல்வாதிகள் யாரும் தலையிடாதீர்கள் என்று கண்டிப்பாக சொல்ல அவர்கள் திரும்பி போய்விட்டார்கள். அப்போதுஒட்டு மொத்த அரசியல்வாதிகளின் மீதும் கோபம் வந்தது. இவர்களின் அரசியல் பிரச்சனைகளுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற ஆத்திரம். வருவாய்துறை அதிகாரி ஒருவர் தொழிலதிபர் என்று சொல்லிக்கொண்டு மாணவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். மாணவர்கள் கேட்டது நேற்று நடந்த சம்பவம் போன்று எங்கள் மீதும் நடக்காது என்பதற்கு என்ன உறுதி என்று கேட்கவும் அவர் நகர்ந்து விட்டார். மாணவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்து செல்ல பேருந்து வரவழைக்கப்பட்டன. அப்போது பார்த்து எங்கிருந்தோ ஒரு பெரிய கல் ஒன்று பேருந்து ஒன்றின் கண்ணாடியை பதம் பார்த்தது. எங்களுக்கும் பதட்டம் கூடிப்போனது. மாணவிகள் வேறு எங்களோடு இருந்தது அதை இன்னும் அதிகப்படுத்தியது. காவல்துறை உயரதிகாரி, தயவு செய்து கலைந்து விடுங்கள், சமூக விரோதிகள் மாணவர்கள் போர்வையில் ஏதேனும் செய்து விடக்கூடும் பின்பு நாங்கள் கடுமையான நடவடிக்கைகள்எடுக்க வேண்டியிருக்கும், தேவையில்லாமல் பிரச்சனையை சிக்கலாக்காதீர்கள் என்று மென்மையாக சொன்னார். எங்களுக்கும் வேறு வழி இல்லை. கலைவதுதான் சரியானதாக இருக்கும் என்றுணர்ந்து கலைந்தோம்.

கல்லூரி காலத்தில் எங்கள் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்திவிட்ட சம்பவம் அது. கைது செய்யப்பட்ட பலரும் ஜாமினில் வெளிவந்த போது எங்களுக்கு நீதித்துறையே இவ்வளவுதானா, குற்றவாளிகளைச் தண்டிக்கமுடியாத நீதித்துறையின் மீதே வெறுப்பு வந்தது.ஆட்சி மாற்றத்திற்கு பின் நீதி கிடைக்கலாம் என்றிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போய் விட்டது. ஆறு ஆண்டுகளாகியும் இன்னும் இழுத்து கொண்டிருப்பது இன்னும் வேதனைக்குரிய ஒன்றே. தங்கள் மகள்களை இழந்த அந்த பெற்றோரின் துயரத்தில் பங்கு பெறுவதை விட வேறெதையும் செய்ய முடியாத கையறுநிலைதான் எல்லோருக்கும்

*
இந்த சம்பவத்தை என் நட்சத்திர வாரத்திலே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாகவும், அவசரகதியில் எழுதக்கூடாது என்பதாலுமே தள்ளிப் போட்டிருந்தேன். மேலே இருப்பது முகமூடியின் பதிவில் இடப்பட்ட பின்னூட்டம்( சில திருத்தங்களுடன்) .

அரசியல் மரணங்களுக்கும் அரசியலக்கான மரணங்களும் நம் ஜனநாயகத்தில் இரண்டற கலந்துவிட்டன. கொள்கையை வைத்து அரசியல் நடப்பது எல்லாம் தேர்தல் அரசியலில் காலாவதியாகிவிடுகின்றன. தேர்தல்களில் வெற்றி மட்டுமே பிரதானம் என்னும் முடிவுக்கு ஏறக்குறைய எல்லா அரசியல் கட்சிகளிம் வந்து விட்டன. அதனால் ஒரு சில கட்சிகளுக்கு வன்முறைச் சாயம் பூசுவதும், சில கட்சிகளுக்கு புனித பூச்சுகள் பூசுவதும் அவரவர் மனதிருப்திக்காக செய்யப்படும் விசயங்களே.

மாணவர் சக்தி உலகில் பல அரசியல் மாற்றங்களுக்கு வழிகோலியிருக்கிறது. பிரச்சனைகளின் வீரியத்தை பொறுத்தும் ஒட்டு மொத்தமாக எழக்கூடிய புரிந்துணர்வுகளும் அவ்வகையான போராட்டங்களை வெற்றி கொள்ளச் செய்கின்றன.தமிழகத்தில் மிக முக்கியமான அரசியல் மாற்றத்திற்கு மாணவர் சமுதாயம் காரணமாக இருந்திருக்கிறது. இதெல்லாம் எனது இன்றைய புரிந்துணர்வுகள். இது பற்றிய எந்த தெளிவும் இல்லாத மாணவ பருவத்தில் நடந்த நிகழ்வுதான் அந்த துயரச்சம்பவம். இந்த மாணவிகளின் மரணம் மாணவ சமுதாயத்திடைய பெரியதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் எதிர்ப்புகுரல்கள் அரசு இயந்திரங்களால் நீர்க்கச் செய்யப்பட்டன. மேடைகளில் எதிர்த்து வீராவேசமாகபேசும் அரசியல்வாதிகள் பலர் தொழில்ரீதியாக அனுசரணையான நிலையை மேற்கொண்டிருப்பார்கள். இது எதார்த்தம். அரசியல்வாதிகளை நம்பி நாம் அணி திரண்டால் அவர்கள் மொத்தமாக அழைத்து கொண்டு எதிரியிடமே அடிமைப்படுத்தி விடுவார்கள்.

தலைவர்களுக்கு தொண்டர்களாக இருப்பது ஒரு ரகம். சொரணையற்ற கொத்தடிமைகளாக இருப்பது மற்றொரு ரகம். தலைமைகளை குளிர்விப்பது ஒன்றே அரசியல் வாழ்வின் வெற்றிக்கு வழிகோலும் என்று இந்த அறிவீலித் தொண்டரவுடிகள் இருக்கும் வரை இது போன்ற துயரங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். எண்ணிக்கைகளும் நடைபெறும் முறைகளும் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கும். ( குற்றம் சாட்டப்பட்டவர்கள் பின்னாளில் கல்வி மந்திரியாகக்கூட வரலாம்- அரசியலின் மிகக்கோரமான அவலம் அது)

இந்த அரசியல் அக்கிரமங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்தூணான நீதித்துறைக்கு சவாலாகவே அமைகின்ரன. அனைவருக்கும் சமமான நீதி கிடைக்கதான் நீதிமன்றங்கள் இருக்கிறதே தவிர காசு இருப்பவனுக்குதான் நீதி என்றால் அது கண்டிக்கப்பட வேண்டும். நீதித்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட துறையாக இருக்கக்கூடாது. தங்கள் அமைப்பு உயர்வானது என்றால் அதன் நேர்மையும் கட்டிக்காக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய நீதிமன்றங்கள் சர்க்கஸ் கூடாரம் போன்றுதான் இருக்கிறது. பல எடுத்துகாட்டுகள் நம் கண்முன்னே கிடக்கின்றன.

ஒவ்வொரு வழக்கையும் வேறு மாநிலத்தில் நடத்த வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் எதற்கு நீதிமன்றங்கள்? நீதித்துறை சுதந்திரமாக இயங்க உறுதி செய்ய வேண்டும். தவறிழைக்கும் நீதிபதிகளுக்கும் மிகக்கடுமையயன தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும். நீதிபரிபாலனைக்கு அரசுகளால் இன்னல்கள் வரும் போது அவை மக்கள் மன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்.

வேறு மாநிலங்கள் வழக்கு நடத்துவது சீமான்களுக்கு வேண்டுமானலால் இலகுவாக இருக்கலாம். சாமான்யனுக்கு? எத்தனை நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இழந்தவனை மேலும் மேலும் அலைக்கழிப்பது மாதிரியான துயரம் வேறெதுவுமிருக்காது. வேறு மாநிலங்கள் என்றாலும் சாட்சியை மிரட்டுவது போன்ற எல்லா அக்கிரமங்களையும் செய்ய அரசியல்வாதிகளினால் முடியும். ஒன்றுமில்லாத சாமன்யனுக்கு எல்லாமே ஒன்றுதான். ஜெயலலிதா வழக்காகட்டும், ஜெயந்திரர் வழக்காகட்டும் அவர்களிம் கோரிக்கைகள் வேறு மாநிலத்து மாற்றவது மட்டுமா கோரிக்கை. மாற்றுமிடம் தங்களுக்கு சாதகமான இடமாக இருக்க வேண்டும் என்ற அரிப்பு வேறு.


இது போன்ற வழக்குகள் எல்லாம் விரைவு நீதிமன்றங்களால் விசாரிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கால எல்லைக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக இருக்க வேண்டும். தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும், உடனடியாக, கடுமையாக. அதற்கேற்ப சட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதற்குண்டான செயல்முறைகளைத்தான் முன்வைக்க வேண்டும். வழக்கமான அரசியல்தனமான முயற்சிகள் சாமான்யனுக்கு எந்த வகையிலும் பயன் தராது. நீதி விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வையும், விரைவுபடுத்த வேண்டிய , நிர்பந்தங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இது குறித்தான எந்த ஒரு முயற்ச்சிக்கும் நான் உறுதுணையாக இருப்பேன். *

எ.பி.ந(எனக்கு பிடித்த் நகைச்சுவையாளர்) - 2005 -2006

எ.பி.ந. ( எனக்கு பிடித்த நகைச்சுவையாளர்) -2005-2006

திரு.சுஜாதா(எழுத்தாளர்)

சமீபத்தில் தனது நகைச்சுவை பேச்சால் மயங்கடித்தூகொண்டிருப்பவர்.

அவற்றில் இவ்விருதிற்காக தேர்ந்தெடுக்கபட்ட நகைச்சுவை முத்துகள்

1. கருத்து.காம் - 2005ஆம் ஆண்டின் சிறந்த இணையதளம்

2.நான் திருக்குறள், சிலப்பதிகாரம் இவைகளுக்கெல்லாம் உரையெழுதிக் கொண்டிருக்கிறேன். அவர்களைவிட நன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.


விருதுப் பரிந்துரை ----- நானே
தேர்வுக் குழு ---- நானே
விருது அறிவிப்பு ---- அட நானேதாம்பா

பி.கு : இந்த தேர்வுக்கும் வலைப்பூ தேர்தலுக்கும் எந்த வித தொடர்பும் கிடையாது:-) )

சோதனை பதிவு

திசைகள் இதழில் எனது கவிதை

வாழ்க்கையெனும் ஓடம் http://www.thisaigal.com/jan06/PoemMuthukumaran.htm

உங்கள் மனைவிக்கு நீங்கள் எத்தனையாவது கணவன்

நமக்கும் கல்யாண வயசு வந்திடுச்சில.....

எல்லோரையும் போல நமக்கும் கல்யாண கனவுகள் வர ஆரம்பிசிடுச்சுபா....

கனவு மட்டும் கண்டா போதுமா?

நனவாக்க வேண்டாமா?

என்ன செய்யறது.கனவு நிறைவேற மொதல்ல பொண்ணு தேவை,

அதிலயும் நமக்கேத்த பொண்ணு வேணும். நல்ல பாசமான பொண்ணா, ஒழுக்கமான பொண்ணா, தைரியமான பொண்ணா வேணும். சரி அத வீட்ல பார்த்துகுவாங்க. முகவரி வேண்டுபவர் தனிமடலில் தொடர்பு கொள்க:-)

இங்க ஒன்னு சொல்லிக்கணும்.

ஒழுக்கமான பொண்ணு வேணும்ன்னு சொல்ற தகுதி எனக்கு முழுசா இருக்குதுபா.!!

அப்புறம் சின்ன வயசில இருந்தே நாம ரசிக்கிறது கல்யாணங்களை.
அங்க நடக்கிற சுவரஸ்யமான விசயங்கள் மீது எப்போதும் ஒருவித கிறக்கமே உண்டு.பருவம் வந்த நாளில் இருந்து கலந்து கொண்ட திருமணங்களின் போது என்னை கதாநாயகனாக்கி மனசுக்குள் தனி ட்ராக் ஒன்று ஓடும். பயப்பிடாதீங்க பொன்ணு வேறதானுங்க.....

அந்த சின்ன சின்ன விளையாட்டுகள் எல்லாம் மிக மிக பிடித்தமானது. மோதிரம் எடுப்பது,எடுக்கும் சாக்கில் கையை கிள்ளுவது அல்லது பிடித்தவைத்து கொள்வது, தேங்காய் உருட்டி விடுவது, தலையில் அப்பளம் அடிப்பது, தொட்டில் கட்டி தாலாட்டு பாடுவது என நினைக்கும் போதே உற்சாகத்தை ஊட்டி விடுகிறது.சரி

அப்டியே இன்னும் கொஞ்சம் டீப்பா நம்ம கல்யாண சங்கதிகளை தெரிஞ்சிக்க பயணிச்சபோது(இப்டி எல்லாம் எழுதாட்டி நான் எப்டி இலக்கியவாதின்னு சொல்லிக்கிறது),

விழுந்தது பாரு ஒரு அணுகுண்டு.....

''சோமஹ ப்ரதமோ
விவேத கந்தர்வ
விவிதே உத்ரஹ
த்ருதியோ அக்னிஸடே
பதிஸ துரியஸதே
மனுஷ்ய ஜாஹ''''

இந்த வேத வாக்கியங்களுக்கு என்ன அர்த்தம் என்றால் முதலில் ஸோமன் உன்னை அடைந்தான், இரண்டாவதாக கந்தர்வன் அடைந்தான், மோன்றாவதாக அக்னி உனக்கு அதிபதி ஆனான். மனுஷ்ய வர்க்கத்தைச் சேர்ந்த நான் நான்காமவனாக உன்னை ஆளுவதற்கு வந்திருக்கிறேன்

''அட,

எவ்ள தைர்யம் இருந்தா என் வீட்டுக்காரிக்கு முதல் அவன் அடுத்து இவன் அதுக்கடுத்து இவன் அப்பாலதான் நீன்னு என்கிட்டயே சொல்லுவான்.

ஆறாம் அறிவு கேள்வி கேட்குதுபா? என்னத்த சொல்றததுக்கு....


எத்தகைய ஒரு இழிவான செயலை, பெண்களுக்கு எதிரான வன்முறையை, சடங்கு என்ற பெயரில் அரங்கேற்றி இருப்பார்கள்(க்கிறார்கள்). அதையும் ஆட்டுமந்தை கூட்டம் போல கேட்டு வந்திருக்கிறார்களே மறத்தமிழர்கள்???

பெண்ணை, முழுமையாக கேவலப்படுத்தும் இந்த மாதிரியான மந்திரங்களின் மீதுதான் குடும்ப வாழ்வை கட்டி எழுப்ப வேண்டுமா? மக்களின் இறை நம்பிக்கையை அவர்களை இழிவு செய்வதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தியஇந்த நம்பிக்கை துரோகம் எத்தனை குரூரமானது. ரத்தம் வர வைப்பது மட்டும் வன்முறை அல்ல. இது போன்ற மரபுகளின் வேர்களையே அழிக்கும் தீவிரவாதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

அதன் ஒரு முயற்சியாக

என் திருமணத்தை செய்யப்போகிறேன் ( சில ஆண்டுகள் கழித்து)

இது போன்ற மந்திர மோசடிகள் இன்றி,

தன்னை இழிவு படுத்தும் சடங்குகளை ஏற்க மறுக்கும் தெளிவை பெற்ற ஒரு பெண்ணை என் இணையாக ஏற்று,

பி.கு: மந்திரத்திற்கு விளக்கமளித்து என்னை தெளிவடையச் செய்த பெரியாவாளுக்கு அடியேனின் பாதகோடி நம்ஸ்காரங்கள்.

நன்றி:( சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல்: இரண்டாம் பகுதி, பக்கம் 875)..

இந்த களேபரத்தில ஒன்னை மறந்துட்டேன் -

அதாம்பா

புத்தாண்டு வாழ்த்துகள்
Related Posts with Thumbnails