இந்திய -இலங்கை ஒருநாள் போட்டியை கண்டுகளிக்க பிரணாப் கொழும்பு விஜயம்

நாளை முதல் தொடங்க இருக்கும் இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை கண்டுகளிக்க இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு விரைகிறார். துடுப்பாட்டம் குறித்த ஆலோசனைகளை அணித்தலைவர் மகி க்கு அளித்துவிட்டு திரும்பும் போது அவருக்கு சென்னைத் தீவுத்திடலில் உலகின் ஒரே தமிழின தலைவர் தலைமையில் வரவேற்பு நிகழ்வுக்கும் கவியரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தமிழர்களே தமிழனின் பிணங்களின் மீதமர்ந்து கண்டு களியுங்கள்!

ஈழம், கலைஞர், திருமாவளவன் போராட்டம்,சீமான் விடுதலை,

கடந்தமாதம் ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகக்கூறி கைது செய்யப்பட்ட இயக்குநர் சீமான், பெரியார் திராவிட கழகத்தலைவர் கொளத்துர் மணி, தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சியின் செயலாளர் பெ.மணியரசன் அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிணை வழங்கியிருக்கிறது. சீமான் பிணைக்கு விண்ணப்பித்ததை ஏளனம் செய்த இந்த தேசத்தின் முழுமுதன்மையான தேசபக்தர்கள் ஒன்றைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இந்திய தேசியத்தின் அரசியலைமைப்பு தன் குடிகளுக்கு வழங்கியுள்ள சட்ட உரிமைகளுள் ஒன்றுதான் பிணைக்கு விண்ணப்பிப்பது. அதே போல ஈழ விடுதலைக்காக உள்ளப்பூர்வமாக கொடுப்பவர்களின் நேச உணர்வு என்பது அரசின் சலுகைக்குட்பட்டு வரையறுக்கப்பட்ட உணர்வல்ல. அது தன் இனத்தின் மீதான பற்றின் காரணமாக வெளிப்படும் உணர்வு. ஈழ விடுதலைக்காக குரல்கொடுத்தால் அடக்குமுறைகளுக்கு உட்பட நேரிடும் என்பதைக் கூட அறியாத சிந்தனைத் திறனற்றவர்கள் அல்ல. இந்திய தேசியத்தின் ஏமாற்று முகத்தை தன் உரையின் வாயிலாக கிழித்தெறிந்த சீமான் அதன் விளைவுகளை நன்கு அறிந்தவரே. அதனால் அவர்கள் யாரும் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. ஊடகங்களின் வெளியிடும் செய்திகளை படித்துக்கொண்டு சீமான் போன்றவர்களும் அவ்வாறே எண்ணுவார்கள் என்று முடிவு செய்து கொள்வது சிலருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் உண்மை அதுவல்ல.

இந்திய நாட்டை ஆண்ட, ஆளும் தலைவர்களில் எண்பது விழுக்காடுகளுக்கும் மேல் பிணைகளில் வெளிவந்திருப்பவரே. கொலைக்குற்றச்சாட்டுக்கு உள்ளான சங்கரச்சாரியே பிணையில் இருக்கும் போது சீமான் பிணைக்கு விண்ணப்பத்தது என்பது அச்சத்தின்பால் ஏற்பட்டது இல்லை. பிணையில் வந்தாலும் மறுபடியும் ஈழ விடுதலைக்காக அவரது குரல் ஒழித்துக்கொண்டுதான் இருக்கும். சிறைச்சாலை சீமான் போன்றவரை சிதைக்காது, செதுக்கும்.

ஈழத்தில் அழிவின் விளிம்பில் இருக்கும் 5 இலட்சம் மக்களைக் காக்க வேண்டுமென்று சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருமாவளவன் அவர்களை நன்றி பெருக்கோடு உணர்வுள்ள தமிழர்கள் காண்கிறார்கள். உலகம் எங்கும் விரிந்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு அவரது உண்ணாவிரதம் ஒரு வித நம்பிக்கையுணர்வைத் தந்திருக்கும். உண்ணாவிரதத்தை பாதியிலே முடித்துக்கொண்டாரே, சாகவேயில்லையே எல்லாம் நாடகம் என்றும் அவரது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லையே ஏன் முடித்துக்கொண்டார் என்று பரிவோடு கேட்பவர்கள் அதைச் செய்ய மறுக்கும் மத்திய அரசின் மீது மட்டும் மாறப்பற்று கொண்டிருப்பதேன்?? திருமாவளவனால்தான் செய்யமுடியவில்லை என்று ஏளனம் செய்பவர்களே, செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி கேள்விகளைத் திருப்புங்கள்.

திருமாவளவன் என்பவர் ஒற்றை மனிதர் அல்ல, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஒரு அடையாளம், அவர்களின் முன்னேற்றத்திற்கு அவரது பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாகும். ஆகையால் அவர் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக்கொண்ட அனைவரும் அவரது உயிரின் முக்கியத்துவத்தை உணர்ந்தே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். போராட்டம் தொடர்ந்திருந்தால் பாவம் இந்திய தேசியம் பூசிக்கொண்டிருக்கும் அகிம்சை அவதாரம்தான் அம்மணமாகிப் போயிருக்கும். அகிம்சை தேசத்து முகமுடி களையப்படாதிருக்க உதவிதான் செய்திருக்கிறார். இந்த போராட்டம் குறித்த இன்னொரு நகைச்சுவை பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியினால் அதிர்ந்துதான் இப்போராட்ட யுக்தியையே கையில் எடுத்தாரான்பது. இந்திய அளவில் மாயாவதின் எழுச்சி என்பது வரவேற்கக்கூடிய ஒன்று. சிறுத்தைகளிலிருந்து பிரிந்து சென்ற செல்வப்பெருந்தகை அவர்களுக்கு மிகப்ப்பெரிய பிம்பத்தை தருவதைக் கண்டால் சிரிப்பாகத்தான் வருகிறது. செல்வப்பெருந்தகையுடன் இருப்பது செல்வமே அன்றி சிறுத்தைகளல்ல!


ஈழ பிரச்சனையில் கலைஞரின் தொடர்ச்சியான மெளனம்தான் மிகவும் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகும், இன்னும் எதற்காக காத்திருக்கிறார் என்பதும், காங்கிரஸ் கட்சிக்கு அளவுக்கதிமாக வளைந்து கொடுத்துப் போவதும் ஏனென்றுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஈழமக்களே இல்லை அவர்கள் எல்லாம் இலங்கை மக்களே என்றுரைக்கும் ஜெயலலிதா இருப்பதால்தான் கருணாநிதியை ஆதரிக்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸின் துணை இல்லாமல் ஆட்சியைக் காப்பாற்ற்க் கொள்ள அவர் அதிகம் சிரமப்ப்பட வேண்டி இருக்காது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. ஆனால் தமிழினத்தின் எதிரிகளை அடையாளப்படுத்தி அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி மக்கள் துணையோடு புறக்கணிக்க செய்வதே அவரது அரசியல் வாழ்விற்கான தலைமையான சாதனையாக இருக்கும். மாநில சுயாட்சிக்காக போராடிய இயக்கத்தின் தலைவராக இருப்பவர் டெல்லியின் இனவழிவுப்புக்கு துணை போவது என்பது மன்னிக்க முடியாத துரோகமாகும்.

காங்கிரஸ் உடனான உறவை முறித்துக்கொண்டால் அவர்கள் அதிகபட்சமாக அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார்கள். தமிழின எதிரிகளை ஒன்றாய் வெல்வதற்கு அதைவிட வேறு அற்புதமான வாய்ப்பொன்று அமையாது, அதற்காக தேர்தலுக்கு முன்பே பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டுச் சேர வேண்டும் என்ற தேவையில்லை, அவர்களினால் தேர்தல் களத்தில் சிலநூறு வாக்குகளை தவிர வேறெந்த ஆதாயமும் இல்லை. தமிழின எதிர்களை வென்று கணிசமான நாடளுமன்ற உறுப்பினர்களோடு டெல்லி சென்றால் தேவையானதொரு, நாம் விரும்பும் அழுத்தத்தை புதிய அரசாங்கத்தின் மீது செலுத்த முடியும் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தன் நலனுக்காக கூட்டணிகளை மாற்றிக்கொண்ட வரலாற்றை கொண்டவருக்கு தன் இன நலனுக்காக மாற்றிக்கொள்வதில் எந்தத் தவறும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் இருப்பை அவர்களுக்கு புரிய வைக்க இதைவிட சிறந்த தருணம் வேறெதுவுமில்லை.

இறுதியாக

கடைசித் தமிழன் இருக்கும் வரை ஈழ விடுதலைப் போராட்டம் ஓயாது. நிச்சடன் வீழாது எம்தமிழினம்! இன்றைய மிகக் கடினமான துயரச் சூழலையும் தாண்டி மீண்டு வரும் தமிழினம் வரலாறாக!!!
Related Posts with Thumbnails