நண்பர் சாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி






நேற்று மதி அவர்களின் பதிவில் நண்பர் சாகரன் மரணம் என்ற செய்தியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டோம். திரும்ப திரும்ப இந்த செய்தி தவறானதாக இருந்துவிடக்கூடாத என்ற பதைபதைப்புடன் வாசித்தாலும் இழப்பை உனர்ந்தோம். மிகவும் அதிர்ச்சியானதாகவும், நம்ப இயலாததாகவும் இருக்கிறது.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக புதிதாக இணையதளம் தொடங்க எண்ணியபோது மனதில் தோன்றியவர் நண்பர் சாகரன். ஏற்கனவே தமிழ்மன்றம், முத்தமிழ் மன்றம் போன்ற களங்களில் ஏற்பட்ட பரிச்சயமும் நட்பும் அவரை தொடர்பு கொள்ள வைத்தது. நாங்கள் துவக்கு மாதிரி இதழ்கள் வெளியிட்டபோது வாழ்த்துகளையும், கருத்துகளையும் சொல்லி மிகுந்த உற்சாகத்துடன் எங்களின் முயற்ச்சிக்கு ஆதரவு கொடுத்ததுடன் எங்களுக்கான இணையதளத்தையும் உடனடியாக ஏற்படுத்தி தந்தார். தமிழின் மீதும் தமிழ் ஆர்வலர்களின் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும், நட்பும், அன்பும் மிகச்சிறப்பானது. தேன்கூடு என்ற வலைதிரட்டியின் மூலம் இணயத்தமிழுக்கு அவர் ஆற்றிய பங்கு குறிப்பிடத்தகுந்தது. ஆனால் நொடிப்பொழுதில் நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் என்பதை தாங்க இயலாததாக இருக்கிறது.

அவரின் மரணச்செய்தி எங்கள் இதயத்தை அறுக்கிறது. இந்த பெருந்துயரில் துவக்கு இலக்கிய அமைப்பு தங்களையும் இணைத்துக் கொள்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடைய எங்களது பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக

இசாக், நண்பன், கவிமதி, முத்துகுமரன். ஆசிப் மீரான், சே.ரா. பட்டணம் மணி.


** நண்பர்களுக்கு எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

திரு சாகரன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அவர்தம் குடும்பத்தினர் இந்த பெருந்துயரிலிருந்து மீண்டு வருவதற்கான மனவலிமையை பெற்றிடவும் நம் இணைய நண்பர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்யலாம். எண்ணற்ற இதயங்களின் ஆதரவு அவர்தம் குடும்பத்திற்கு மனவலிமையை தந்திடும். நேரம் பற்றி நண்பர்கள் சொல்லுங்கள்

காவிரியும் தமிழக விவசாயமும்

காவேரியும் தமிழக விவசாயமும் - அர. செந்தில்குமரன்


காவிரி நடுவர் மன்றத்தை மாறியமைக்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையின் விளைவாக, காவிரி பிரச்சனை மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நடுவர்மன்ற தீர்ப்பு இன்னும் இரண்டொரு மாதங்களில் வருகிற நிலையில் கர்நாடக அரசியல் கட்சிகளின் இந்த கோரிக்கை தமிழக விவசாயிகளையும், கட்சிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.காவிரி பிரச்சனை இன்றுநேற்றல்ல... பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சனை...

அதற்கு முன்பு காவிரி பற்றியும் அதை சுற்றி நடந்த நிகழ்வுகள் பற்றியும் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்...மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள குடகு நாட்டில் காவிரி உற்பத்தியாகிறது. குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி துளு. இம்மொழி தமிழிலிருந்து உருவானது. அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த இப்பகுதி 1956ல் மொழிவழி மாநிலங்கள் பிரிவினையின் போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. மலைகளும், காடுகளும் நிறைந்தது இப்பகுதி. காவிரி இங்குதான் உருவாகிறது சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி நதி கர்நாடகா பகுதியில் 350 கி.மீ. தூரமும், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் 450 கி.மீ தூரமும் பயணம் செய்து வங்கக்கடலில் கலக்கிறது.


மேலும் கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில் கலக்கிறது. ஆக கர்நாடகம், தமிழகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் காவிரி சமவெளி மாநிலங்களாகக் கருதப்படுகின்றன. தமிழகத்தில் காவிரி விவசாயம் தொன்மை வாய்ந்தது. உலகிலுள்ள பெரிய நதிதீரங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடைபெறும் பழமை வாய்ந்த விவசாயங்களோடு ஒப்பிடத்தக்கதாகும். மேலும் தமிழக நிலப்பரப்பில் 34 சதவீதம் காவிரி சமவெளியில் இருக்கின்றது. கர்நாடகத்தில் 18 சதவீத நிலப்பரப்பும், கேரளாவில் 7 சதவீத நிலப்பரப்பும் காவிரி சமவெளியில் இருக்கின்றன. 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 28 லட்சம் ஏக்கர் பாசனப்பகுதி காவிரி நீரினால் பயன்பெற்றது. அன்றைய சூழலில் கர்நாடகா 7 லட்சம் ஏக்கர் பரப்பில்தான் காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சூழலில் காவிரியில் உற்பத்தியாகும் தண்ணீரின் ஆண்டு சராசரி அளவு 671 டி.எம்.சி. ஆக இருந்தது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாகத்தான் விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.முதன்முதலாக கி.பி. 2ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் காவிரி மீது கட்டப்பட்ட முதல் அணை கல்லணையாகும். உலகத்திலேயே மிகவும் பழமைவாய்ந்த அணையாக இது கருதப்படுவது சிறப்பாகும். காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல... அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. ஆம் கி.பி. 11ம் நூற்றாண்டிலும், 17ம் நூற்றாண்டிலும் மைசூர் அரசு காவிரியை தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த முனைந்தது. அப்போதெல்லாம் முதலில் இரண்டாம் இராஜராஜசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தடுத்ததும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டில் −ராணி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.தமிழக, கர்நாடக நீர்வளம்தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சராசரி 1300 டி.எம்.சி. தண்ணீர் உற்பத்தியாகிறது. கர்நாடகா முழுவதும் 3300 டி.எம்.சி தண்ணீர் உற்பத்தியாகிறது. தமிழகத்தை விட கர்நாடகாவில் இரண்டரை மடங்கு அதிகமாக தண்ணீர் உற்பத்தியாகிறது.

தமிழ்நாட்டில் ஓடும் நதிகளில் காவிரி ஒன்றுதான் பெரியநதி. ஆனால், கர்நாடகாவில் காவிரியைவிட 3 மடங்கு அதிக நீர் வளம் கொண்ட கிருஷ்ணா நதியும் ஓடுகிறது. இந்நதி மூலம் மட்டுமே ஆண்டுக்கு 734 டி.எம்சி. தண்ணீர் (காவிரியில் உற்பத்தியாகும் நீரைவிட 63 டிஎம்சி அதிகம் கர்நாடகாவிற்கு கிடைக்கிறது) மேலும் இங்கு உற்பத்தியாகும் 2000 டிஎம்சி நீர் எதற்கும் பயன் இல்லாமல் நோக்கி ஓடி அரபிக்கடலில் கலந்து வீணாகிறது. இது மட்டுமன்று கேரளாவில் உற்பத்தியாகும் 140 டி.எம்.சி. தண்ணீர் கபினி நதி மூலமாக காவிரியில்தான் கலக்கிறது. இந்த அளவு நீரைதான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி பரம்பரையாகவே காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

காவிரிச்சிக்கல்1924ல் உருவான ஒப்பந்தம் 1974ல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கியது கர்நாடாகா.

இதன் மூலம் காவிரி சிக்கல் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தது.இதன் பொருட்டு தமிழக அரசு 1971 ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.

பிறகு 1983ல் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்கம், உச்சநீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நடுவர் மன்றம் அமைக்கும்படி கேட்டது. அதன் பிறகு தமிழக அரசு 1986ல் மத்திய அரசிடம் நடுவர் மன்றம் அமைக்கும்படி விண்ணப்பித்தது. இதன்பிறகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடன் திரு. வி.பி. சிங்கின் மத்திய அரசு 02/06/90 ம் தேதி உத்தரவிட்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது. 1970 முதல் 1990 வரை தமிழக, கர்நாடக மந்திரிகள், முதல்வர்கள் போன்றோர் 21 முறை இப்பிரச்சனைக் குறித்து விவாதித்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவிரி நடுவர் மன்றமே கூட அன்றைய நிலையில் காங்கிரஸ் பாரதியஜனதா போன்ற பெரிய கட்சிகள் அன்றி வி.பி.சிங்கை பிரதமராகக் கொண்ட தேசிய முன்னணியின் முயற்சியால் தமிழக கோரிக்கையின்படி அமைக்கப்பட்டதாகும்.நடுவர் மன்றத்தீர்ப்பு 25/6/91 தேதியிட்ட இடைக்காலத் தீர்ப்பின் முக்கிய அம்சமாக தமிழகத்திலுள்ள மேட்டூர் அணைக்கு ஒவ்வொரு ஆண்டும் (ஜூன் மாதம் ஆரம்பித்து மே மாதத்தில் முடிவடையும்) 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா அனுப்ப வேண்டும் என்றும் (ஜூன் முதல் செப்டம்பர் வரை மட்டும் 137 டி.எம்.சி. தண்ணீர் அனுப்ப வேண்டும்) கர்நாடகா தனது பாசன பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டு இறுதித் தீர்ப்பு வரும்வரை இந்த இடைக்காலத் தீர்ப்பே அமலில் இருந்திடும் என்றும் உத்தரவிட்டது. இதன்பிறகு 25.11.91ல் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா மேல் முறையீடு செய்ததன் விளைவாக 3.4.92ல் நடுவர் மன்றம் விளக்கத் தீர்ப்பு ஒன்றை அளித்தது. இதில் போதிய அளவு தண்ணிர் உற்பத்தியாகாத ஆண்டுகளில் ஏற்படும் பற்றாக்குறையை சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

கர்நாடகாவின் நயவஞ்சகம் இந்த விளக்கத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள பற்றாக்குறை என்ற வார்த்தையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் விடாமல் கர்நாடகா குழப்பி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வழிந்தாலும் பற்றாக்குறை என்று கூறி வந்துக்கொண்டிருக்கிறது.1991ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.

இது மட்டுமல்லாது கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயல்கிறது. தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை இன்று அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயம். இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறுகின்றன. காவிரி: தமிழகத்திற்கு நேரிட்ட அரசியல் சிக்கல்கள்நடுவர் மன்றம் அமைப்பதற்கு முன்புவரை, அதுகாலம்வரை மத்தியில் ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் அரசு 'நடுவர்மன்றம்' என்பதையே அமைக்கவே முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1992ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையில் 12/8/1998ல் உச்ச நீதி மன்றம் காவிரி நதிகள் ஆணையம் அமைக்க இறுதி வாய்ப்பு வழங்கிய நிலையில், உச்சநீதி மன்ற நெருக்கடியின் பேரில் அப்போதைய (1998) பாரதிய ஜனதா கூட்டணி அரசு உருவாக்கிய காவிரி ஆணையமோ, நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்த முறையான அமைப்பாக உருவாக்கப்படவில்லை. இதன் மூலம் உச்சநீதிமன்ற வழக்கும் முடிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கர்நாடகத்திற்கு சாதகமாகிவிட்டது. தமிழக முக்கிய அரசியல் கட்சிகள் (அ.தி.மு.க, தி.மு.க மற்றும் இதர தேர்தல் அரசியல் கட்சிகள்) இவ்விஷயத்தில் அதிகளவில் - டெல்டா விவசாயிகளின் உணர்வுகளை புரிந்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரச்சினை தீர்த்து வைப்பதில் காட்டும் ஆர்வத்தைவிட இவர்களின் யார் மக்களின் காவலன் என்கிறவகையான அறிக்கை போர்களில்தான் அதிகம் அக்கறை காட்டுகின்றனர்.அதுமட்டுமல்லாது மாற்றுப் பயிர் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாகக் கூறி காவிரியில் பன்னெடுங்காலமாக நமக்கு உள்ள உரிமையை மறைமுகமாக நீர்த்து போகச்செய்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல, தேசிய கட்சிகளான காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கர்நாடகத்தில் செல்வாக்குள்ள கட்சியாக விளங்குவதால் அவை கர்நாடகத்திற்கு எதிராக செயல்பட தயங்குகிறது. தேசியக்கட்சிகள் என்று கூறிக்கொள்ளும் இவர்களது தமிழ்நாடு பிரிவு தண்ணீர் கேட்டும், கர்நாடக பிரிவு தண்ணீர் தரக்கூடாது என்று கூறியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது கூட காவிரி நடுவர் மன்றத்தையே மாற்ற வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.காவிரி நீரை மறுப்பதில் கன்னடர்களுக்கு உள்ள ஒற்றுமை அதை பெறுவதில் தமிழர்களுக்கும், தமிழக ஆட்சியளார்கள், அரசியல்யர்களுக்கு இல்லை. அதனாலேயே மத்திய அரசு இதில் அதிக அக்கறை காட்டுவதில்லை. இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு பாலைவனமாக ஆவதை யாராலும் தடுக்க முடியாது. இதை உணர்ந்து தமிழக மக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு அமைப்பாகி காவிரியை மீட்க முயல்வதோடு தென்னக நதிநீர் இணைப்பை நிறைவேற்ற ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும். இந்த நெருக்கடியானது மத்தியரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துமேயானால் காவிரி தீர்விற்கு அதுவே அச்சாரமாக அமையும்.

நன்றி: ஆறாம்திணை.காம்

போலி - டோண்டு

இரண்டு நாட்களாக சூடு பறக்க விற்பனையாகிக் கொண்டிருக்கும் போண்டா மஹா உற்சவத்தில் நானும் கலந்துகிறேன். இரண்டு ஆண்டுகளாக போலிப் புராணம் பாடியவர் இன்று போலியாய் அம்பலப்பட்டு நிற்கிறார். இது எதிர்பாராதது மற்றும் அல்ல பெரும் ஏமாற்றத்தை தருகிறது. ஆனால் ஒன்று மட்டும் உறுதிப்பட்டு நிற்கிறது.

தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை கட்டாயமாக்கிய போது அதை தனது வெற்றியாக அறிவித்து கொண்ட திருவாளர் டோண்டு அவர்களே, உங்கள் யுத்தத்தை உங்களிடமே வைத்துக்கொள்ளலாமே, ஏன் பொதுவில் கொண்டு வந்தீர்கள். என்ன யோக்கியதை இருக்கிறது போலிகளைப் பற்றி பேச உங்களுக்கு. பதிவு பதிவாய் போய் எலிக்குட்டியையும், அனானி அதர் ஆப்சன்களை பற்றி நீட்டி முழக்கியது எதற்கு.

உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டதற்காக ஆபாச அர்ச்சனைகளை பெற்றார்களே, அவர்கள் எல்லாம் எதற்காக உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்டார்கள்? நீங்கள் போலித்தன்மை இல்லாது இருப்பீர்கள் என்றூ நம்பித்தானே. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கைய்யே என உங்க
அரிப்புக்கு ஏன் தமிழ்மணம் போன்ற பொதுத்தளத்தை பயன்படுத்திக் கொண்டீர்கள்.

நான் என்ன ஆபாசமாவா பேசினேன் என்று கேட்டீர்களானால் ஆபாசத்தை விட அற்பத்தனம் என்பது குரூரமானது. உங்களது நடவடிக்கைகள் எல்லாம்
கடைந்தெடுத்த அற்பத்தனம். நீங்கள் போலித்தன்மையற்றவராக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களுக்கு ஆதரவளித்த எல்லா பதிவர்களுக்கும் பந்தி போட்டு மலத்தை பறிமாரிவிட்டீர்கள். பிறர் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும், மதிப்பையும் உங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டு, செய்தவந்த போலித்தனம் அம்பலப்பட்டு நிற்க போர்யுத்தி என்று சொல்லும் போது அருவருப்பாய் இருக்கிறது.

அம்பலப்பட்டவுடன் ஆங்கிலத்திற்கு தாவி தப்பிக்கும் உங்களுக்கு சுத்தத்தமிழில் ஒரு வாக்கியம்.

ஈரத்துணி போட்டு கழுத்தறூக்கும் வழக்கத்தை இந்த வயதிற்கு மேலாவாது விடுங்கள்.

**

போலி- டோண்டு என்று மிகச்சரியாக கணித்த உங்கள் புத்திக்கூர்மைக்கு என் வணக்கங்கள்.

பொறியாளர் கணேசன் மீட்பு

விருதுநகர்: அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக பொறியாளர் கணேசனை, ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். பொறியாளரான இவர் அஸ்ஸாமில் உள்ள ராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த டிசம்பர் 22ம் தேதி கணேசன், பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்தபோது உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். கணேசனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 3 கோடி பணம் கொடுக்க வேண்டும் என கணேசனின் வீட்டுக்குப் போன் செய்து தீவிரவாதிகள் மிரட்டினர்.

கணேசனை மீட்கும் பணியில் முதலில் அலட்சியம் காட்டப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரதிதேவி தனது குடும்பத்தாருடன் சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை பார்த்து கண்ணீர் மல்க மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு முதல்வர் கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உதவியினால் ரதிதேவி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ராணுவ உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. கணேசனை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்த ராணுவம் சில நாட்களுக்கு முன்பு பூடான் எல்லை அருகே கணேசன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்தது.
அங்கு கணேசன் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், ராணுவம் அப்பகுதியை முற்றுகையிட்டது. உள்ளூர் போலீஸாரும் உடன் வந்தனர். தாங்கள் முற்றுகையிடப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் கணேசனை விட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.இதையடுத்து கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. பின்னர் பூடானில் உள்ள இந்திய ராணுவ அலுவலகத்திற்கு கணேசன் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கணேசன் பத்திரமாக மீட்கப்பட்ட விவரத்தை ராணுவ அதிகாரிகள் ரதிதேவிக்குத் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்.கணேசனும், ரதிதேவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினருடன் பேசினார். இதனால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். விஜய கரிசல்குளம் கிராமமும் மகிழ்ச்சி அடைந்தது. அலுவல் ரீதியான விசாரணைகள் முடிந்த பின்னர் இன்னும் ஒரு வாரத்தில் ஊர் திரும்பவுள்ளதாக கணேசன் தெரிவித்துள்ளார் என ரதிதேவி தெரிவித்தார்.
நன்றி: தட்ஸ்தமிழ்.காம்
**
சிறப்பாக செயல்பட்டு பொறியளர் கணேசனை மீட்ட ராணுவத்திற்கு பாராட்டுகள்

''புஷ்''ஷாவதரம்


போட்டுத்தாக்கு

//நூறாண்டுகளுக்கு முன் அன்பற்ற அன்னியர் / படையெடுப்பாளர்கள் தந்த பாலியல் கொடூரங்களால் இந்துமத வாழ்வியல் வாழ்க்கையில் அங்கமாக திணிக்கப்பட்டு இருந்த உடன்கட்டை ஏறுதல் என்பது இன்று முற்றிலும் காணாமல் போகவில்லையா?//

வாழ்த்துகள் ஹரிஹரன்!!!

இசை, இளையராஜா, பெரியார்.

சமீபத்தில் வலைப்பூவில் வெகுவாக பேசப்பட்ட விடயம் பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க இளையராஜா மறுத்தது. அரசியல் அநாதையாகிப் போன பா.ஜ.க இளையராஜவின் இந்த முடிவை ஆதயமாக்கி அரசியல் செய்ய முனைகிறது.

முதலில் ஒரு பணியை தேர்ந்தெடுப்பதற்கான முழு உரிமையும் இளையராஜாவிற்கு உண்டு. அதை யாரும் விவாதத்திற்கு உட்படுத்த இயலாது. அந்த வகையில் இந்த மறுப்பு எதார்த்தமானது. நிர்பந்தத்தின் காரணமாகவோ, மனவிருப்பமின்றியோ வெளிவரும் எந்த படைப்பும் உயிர்ப்புடன் இருந்திடாது. ஒரு கலைஞனாக அவர் எடுத்திற்கும் இந்த முடிவு வரவேற்கத்தக்கதே.

ஆனால் அவர் மறுத்ததற்கு காரணம் பெரியார் ஒரு கடவுள் மறுப்பாளர் என்றால் இசையில் ஞானியாக இருந்தாலும் வாழ்வியலில் அவர் பூஜ்ஜியம் என்றே காட்டுகிறது.

பெரியாரை பின்பற்றுபவரும் சரி, அவரை எதிர்ப்பவரும் சரி அவரை ஒரு கடவுள் மறுப்பாளராகவே அடையாளப்படுத்துகின்றனர். பெரியாரின் கடவுள் மறுப்பு என்பது விரிந்த தளம் கொண்டது. அவரின் கடவுள் எதிர்ப்பு என்பது
வேத அதிகார எதிர்ப்பே. இந்த மக்களை சாதியின் பெயரால் வர்ண அடுக்குகளில் வைத்து அடிமைப்படுத்திய வேதத்தை, வேத அதிகாரத்தை எதிர்ப்பதற்கு எடுத்த கருவியே.

தனிப்பட்ட இறை நம்பிக்கையை அவர் முழுமையாக ஆதரித்திருக்கிறார். மதித்திருக்கிறார். ஆனால் இறை நம்பிக்கை என்னும் பெயரில் மனித குலத்தை அடிமைத்தனம் செய்வதை மிக மூர்க்கமாக, தயவு தாட்சண்யமின்றி எதிர்த்திருக்கிறார். அவர் அமைத்து கொடுத்த பாதைதான் நாம் இன்று ஓரளவேனும் வாழ்க்கையில் சுயமரியாதையோடு பயணிக்க வழி செய்திருக்கிறது. பெரியாரை வாசிக்க, புரிந்து கொள்ள, அடிப்படையில் மனதளவிலேனும் சமத்துவத்தை கொண்டிருப்பவராக வேண்டும். அத்தைகைய எண்ணம் இல்லாத எவராலும் அவரை உள்வாங்கி கொள்ள இயலாது.

இளையராஜா ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும்.


இளையராஜவிற்கு, அவன் சுயமரியாதைக்கு அநீதி, அவமானம் என்று வரும் போது துணை நிற்பவர்கள் பெரியாரிய வாதிகளாகத்தான் இருப்பார்களே அன்றி இன்று ஆதரவளித்து அரசியல் செய்யும் கோமகன்கள் அல்ல

திரு.கா.காளிமுத்து மரணம்.



தமிழக முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னாள் அவைத்தலைவரும், சிறந்த தமிழ்ப்பேச்சாளருமான திரு.கா.காளிமுத்து இன்று அதிகாலை மரணம்டைந்தார். திராவிட இயக்கங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு. அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.



இதுகுறித்த தட்ஸ் தமிழ்.காம் செய்தி
http://thatstamil.oneindia.in/news/2006/11/08/kalimuthu.html

தமிழகம்''50

இன்றோடு ஐம்பது ஆண்டுகளாகிறது. தமிழகம் மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்டு. நிலவியல் அடிப்படையில் சில நகரங்களை அண்டை மாநிலங்களிடம் இழந்த போதிலும்பெரும்பாலான பகுதிகளை தன்னிடமே வைத்திருக்கிறது. அதற்காக உழைத்த அத்துணை பெரியோர்களையும் நன்றியோடு இந்த தருணத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.

மொழிவழி மாகாணங்கள் அமைந்தது மிக எதார்த்தமானது. தேவையுமானது.
இந்தியா என்பது ஒற்றைத் தேசமல்ல. அது தேசங்களின் தேசம். வேறுபட்ட அதே சமயம் தனித்துவமிக்க தேசங்களை உள்ளடக்கியிருக்கும் ஒரு துணை கண்டம். அதனால்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் கூட்டமைப்பின் அடிப்படையாக கொண்டிருக்கிறோம்.

இந்திய தேசியம் ஒற்றைத்தன்மை உடையது என்று நாம் சொல்லுவோமாயின் அது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதேயாகும்.
பல தேசியங்களை கொண்ட பன்மைத் தன்மை வாய்ந்தது.
இந்தியாவின் வேறு எந்த மாநிலங்களையும் விட தமிழகத்தில் இந்த ஒற்றைத் தன்மையை திணித்துவிட முயற்சிகள் நடந்து கொண்டே வருகின்றது. அதற்கான எதிர்ப்புகளும் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இன உணர்வு என்பது சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்த வகையில் மற்ற மாநிலங்களை பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது. நமது நிலையை நோக்கும் போது அது நெருடலாகவே இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் மாநிலம் சார்ந்த தேசிய உணர்வுகளை கொண்டிருக்கிறது. அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. நம்மைச் சுற்றியிருக்கும் மாநிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரம் அவர்களிடம் தம் மொழி சார்ந்த, நிலம் சார்ந்த தேசிய உணர்வு மிகுந்திருக்கிறது.

ஆனால் அதே உணர்வை தமிழகத்தில் கொண்டிருந்தால்???

உங்கள் பெயர்??

பிரிவினைவாதி!

ஏனிந்த நிலமை. தனக்கென தனிக்கொடியை வைத்திருக்கும் கர்நாடகத்தினரை யாரும் பிரிவினைவாதிகள் என்று சொல்வதில்லை. இந்திய தேசியத்தைவிட கர்நாடக தேசியத்தை அவன் பெரிதாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போதும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. அவன் தன்னை கர்நாடகத்தானாகவே அடையாளப்படுத்துகிறான். கர்நாடகத்தானகவே இருக்கிறான். எந்த மத, சாதியினராக இருந்தாலும் அவனிடம் கர்நாடக தேசிய உனர்வே மேலோங்கி இருக்கிறது. தன்னை முதலில் கர்நாடகனாகவும் பிறகே இந்தியனாக அவன் உணர்கிறான். தன்னை இந்தியனாக உணர்திருந்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லியிருப்பானா?

சொன்ன போதும் அவனை பிரிவினை வாதி என்று எவனும் சொல்லவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழனாக அல்லாமல் இந்தியனாக இருக்க வேண்டும். தமிழகத்தின் மீதுமட்டும் ஏனிந்த திணிப்பு. மற்ற மாநிலங்களைப் போலத்தான இந்தியாவில் இணைந்திருக்கிறது. தேசிய உணர்வை அளக்க ஏன் இந்த வேறுபட்ட அளவீடுகள். தமிழனின் தேசிய உணர்வு மட்டும் ஏன் சோதனைகளுக்குட்படுத்தப்ப்டுகிறது. ஏன் இந்த சமத்துவமற்ற நிலை. சிந்தித்துப்பார்க்க வேண்டும். இங்கிருந்து கொண்டே நம் உணர்வுகளை அடையாளங்களை, பண்பாட்டை சிதைப்பவர்களை அடையாளங்கண்டு,
அவர்களின் ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும் தகர்க்க வேண்டும்.

வாழ்க தமிழ்!! வாழ்க தமிழ்நாடு!!


Link: Siva murugan blog :நிகழ்வுகள்: தமிழ்நாட்டுக்கு வயது 50

சிதம்பர ரகசியம்

*கோயில் எப்படி ''Private Property'' ஆகும்.??

கோயிஞ்சாமித்தனமா கேள்வி எல்லாம் கேட்கப்புடாது.
ஆண்டவனே அவங்களோட ''Private Property''யாத்தான் இருந்திருக்கிறார்.


இது புரியாம தீடிர்னு இப்படி குதிச்சா என்ன பண்றது. ஏதோ ஆறுமுகம் புண்ணியத்தில சிவனும் இப்ப லைம்லைட்ல வந்துவிட்டார். ஆனா இந்த கூத்துகளை எல்லாம் அவரின் திருவிளையாடலில் ஒன்றாகவேப் பார்க்கிறேன். சிவனின் இருப்பை தமிழகத்தில் யாரும் மறுதலித்து பேச முடியாது. மரபு ரீதியாக, இறையியல் நம்பிக்கை ரீதியாக, வரலாறு ரீதியாக என்று எந்த வகையில் பார்த்தாலும் தொடர்புடையவன். வெல்ல முடியதாததால் அவனும் அவனது தத்துவமும் உட்செரிக்கப்பட்வை. ஆரியமய(மா)க்கப்பட்டவன்.

ஆனால் அவன் சிவன் ஒரு தமிழன். நாகன். திராவிடன். எப்படி என்னான்னு சந்தேகம் வந்தா தமிழ்க்கடவுள் முருகனுக்கு அப்பனவன். கூடுதல் அத்தாட்சிக்காகத்தான் இதைச் சொன்னேன்.முருகன் அவன் பிள்ளை இல்லைனு சொன்னீங்கனாலும் எனக்கு வசதிதான். மொத்த ஆரியம் & வகையறாக்களுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு கிடையாதுனு எளிதா முடிச்சுகிடலாம்.

ஓடியாங்க ஓடியாங்க.

என்னை மொத்துவதற்கு. இறைவன் எங்கும் இருப்பவன். மொழி இன நில எல்லைகளை கடந்தவன் என ஒரு ஆன்மீகச் சொற்பொழிவும் நிகழ்த்திவிட்டுப் போங்கள். எல்லோரும் காதுகுளிர கேட்டு பக்திப் பரவசபிரவாகம் எடுக்கலாம். சரின்னு திருந்தி கோயிலுக்கு போறேன்னு சொன்னா மட்டும் உன் மனசுல அவன் இருக்கான் அங்கேயே கும்பிட்டுக்கனு சொல்லுவீங்க. ஆயிரமாண்டுகளாய் பக்திரசத்தில் நனைந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு முறை கேட்பதால் குடி மூழ்கிப்போய்விடப்போவதில்லை.

''சே சே இந்த இந்துமத விரோதிகளே இப்படித்தான்..''

கேள்வி எதுவும் கேட்டுவிட்டால் அவன் இந்து மத விரோதியாகிவிடுவான். உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் ஒதுங்கிப் போக வேண்டியதுதானே? ஏன் மூக்கை நுழைக்கிறாய் என்று வியாக்கானங்கள் வேறு. என் மீது திணிக்கப்பட்டிருப்பதை நான் தான் கேட்கமுடியும். கடவுள் உண்டு. நீ நம்பிக்கை வைத்திருப்பவனே உன் இறைவன். ஆனால் அவன் மீது உனக்கெந்த உரிமையும் இல்ல. அவன் வேதங்களுக்கு கட்டுப்பட்டவன், வேதங்களைச் சொல்லும் எங்களுக்கு கட்டுப்பட்டவன் என்று சொல்பவனுக்கு பேர் இங்கு புனிதன்கள். மனம் புண்பட வேண்டுமென்றால் இந்த அவலத்தை கண்டுதான் புண்பட வேண்டும்.

ஆண்டவனும் சரி அவன் மொழியும் சரி அவர்களிடத்தில் சிறைப்பட்டு கிடக்கிறது. இதற்கெல்லாம் வருந்தாது மறத்துப்போயிருக்கும் மனிதர்களுக்கு கடவுள் இல்லை என்று சொன்னால் மட்டும் மனம் ரணப்பட்டு போகிறதாம். போகட்டுமே! அடிமைகளுக்கு இதனால் என்ன குறைச்சல் வந்துவிடுகிறது.

மக்களை அவர்கள் நம்பிக்கைகள் கொண்டே அடிமைத்தனம் செய்திருக்கிறான். தன் அதிகாரத்தை நிறுவுவதற்கு ஆயுதமாக மக்களின் இறை நம்பிக்கைகளையே பிரயோகிக்கிறான் அவனுடைய சம்பிரதாயங்கள் என்னும் ச(க)தி பூசி. அதை உடைக்க வேண்டுமானால் அந்த ஆயுதத்தை முதலில் பிடுங்கி எறிய வேண்டும்.ஈரோட்டுக்கிழவன் செய்ததும் அதைத்தான்

ஆனால் நாமெல்லாம் அவர்களிடத்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. குறிப்பாக அரசு அதிகாரம். இந்த பாடத்தை நிச்சயம் அவர்களிடமிருந்து பயின்றே ஆக வேண்டும். நாட்டுக்கரசன் வேந்தன். வேந்தனுக்கரசன் இறைவன். இறைவன் இவர்களளின் சிறைப்பறவை.
அரசன், அவன்குடி மக்கள் எல்லாம் சிறைப்பறவைகள். சுருக்கமா சொன்னா அடிமைகள். ஆனால் நேரடியாக எந்தத் தொடர்பும் இருக்காது. ஆனால் இதை எப்படிச் சாதித்தான். நம் நம்பிக்கைகள் பெயரலேயே. நிறுவனப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் மூலம் எதையும் செய்யலாம். அது சட்டப்படியானதாகி விடுகிறது. நீதி ஒன்றுதான். அநியாயங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் செய். ஆனால் சட்டப்படி செய். தண்டனை கிடையாது.மறைந்திருக்கும் மாய நூலினால் நம்மை கட்டி வைத்திருப்பான்.


அரசன் தம்மை ஆண்டு கொண்டிருப்பதாக மக்கள் நினைத்திருக்க அரசனை அந்தணன் ஆண்டு கொண்டிருக்கும் அவலம் மறைக்கப்பட்டிருக்கும். அவனது தேவைகள் ஆண்டவன் பெயரால் அரசுச் சட்டங்களாகப்பட்டன. மக்களுக்கெதிராக இருப்பினும் போராட முடியாது. ஏனென்றால் நீங்கள் சட்டத்தை மீறுகிறவராகிவிடுகிறீர்கள். தண்டனைக்குரியவராகி விடுவீர்கள். அத்தனையும் முறைப்படி நிகழும். சட்டம் என்பதும் விதிகள் என்பதும் மக்களுக்கானதாக இருப்ப்பதற்குபதில் ஒரு குழுவின் விருப்புகளின் பால் அமைந்ததுவிட்டது.

இவர்களுக்குள் மறைந்திருக்கும் நியாய உணர்வு வ்வப்போது வெளிவரும். சமீபத்திய உதாரணம் தாழ்த்தப்பட்டவர்கள் மீது பெருக்கெடுத்து வரும் பார்ப்பனியத்தின் கரிசனம்.பாய்ந்தோடிவரும் பாச உணர்ச்சி. பிற்படுத்தப்பட்டவர்களால் தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைகளை மறக்கவியலாகாது. ஆனால் இதினல் பார்ப்பனியத்தின் பங்கை மறைத்துவிட்டு பேசமுடியாது. பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட இனங்கள் என்பவைகளே வர்ணாசிரமத்தின் விளைபொருட்கள்தானே. அடுக்குமுறை சொல்லும் தத்துவ விச விதையை எடுத்தெறியாமல் களைகளை மட்டும் களைந்து என்ன பயன். விச விதைகள்தான் களைகளை நீக்குவதற்கு உதவுவதாக வேடங்கட்டிக் கொண்டு வருகிறது.

ஒரு பழமொழி உண்டு.

யோக்கியர் வர்றார். செம்பை எடுத்து உள்ளே வை என்று.

நேர்மையையும், நியாயத்தையும் தர்மத்தையும் பற்றி பேச இந்த சகுனிகளுக்கு என்ன உரிமை இருக்கிறது. மக்களின் பொதுக்குரல் என்பதையே தன எண்ணத்தின் பிரதிவடிவங்களாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு .

சிதம்பரம் கோயிலில் நடைபெற்றது ஒன்றும் ஆச்சர்யம் அளிக்கவில்லை. இவ்வளவு நாள் வாய்மூடி இருந்த சமூகம் இன்று கேள்வி கேட்பதை பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறது.
**
அப்புறம் ''சட்டப்படி''

இந்த வார்த்தைகளின் பின்னிருக்கும் அரசியலைத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அவர்கள் முழுமூச்சாக இறங்கக்காரணமும் இந்திய மக்களின் மீது தங்களது அதிகாரத்தைச் செலுத்த சட்டப்படியான உரிமத்தைப் பெற வேண்டும் என்ன ஆவல் என்பதை மறுக்கமுடியாது. தங்களது அதிகாரத்தை ஒரு திரண்ட நிலப்பரப்பின் மீது செலுத்த வாய்ப்பு வரவிருப்பதை உணர்ந்தபோது அதற்காக அவர்கள் உழைத்தது எதார்த்தமானது. சுதந்திரத்தின் பெயரால் கிடைக்கவிருக்கும் அந்த அதிகாரத்தின் மூலம் தங்களது தேவைகளை, சட்டங்களாகிவிட்டால் எந்த நாளும் கவலை இல்லை. ஏனென்றால் அதை எதிர்ப்பவன் அரசியல் சட்டத்தை எதிர்ப்பவனாகிவிடுவான் அல்லவா. ஆனால் என்ன செய்ய அவர்களின் துர் அதிர்ஷ்டம் அம்பேத்கார் என்னும் வடிவில். அம்பேத்கார் இல்லாவிட்டால் இந்தியச் சட்டம் என்பது மனுதர்ம சட்டமாகாத்தான் ஆகியிருக்கும். இவர்களின் அயோக்கியத்தனங்கள் எல்லாம் சுதந்திரப்போராட்ட ஜமுக்காளத்தால் போர்த்தப்பட்டன. இந்த உண்மைகளை உணர்ந்து எதிர்த்தவர்களுக்கு சுதந்திர போராட்டத்தின் எதிரிகள், அந்நிய அரசின் நாட்டின் கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதே அரசாங்கத்தின் எல்லா சுகங்களையும் பெரும்பகுதி இவர்கள் அனுபவித்ததும் மட்டும் மறைக்கப்பட்டது. அதே உத்திதான் இன்று இவர்கள் எல்லாம் தேசபக்த புனிதர்களாகவும் இவர்களின் அதிகார அரசியலை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என்று பட்டம் கட்டப்டுவதைப் போல.

நீதிமன்றங்கள்...

மன்னுச்சுக்குங்க! அது மனுநீதிமன்றங்களாத்தான் இருக்கு.

ஏதோ பிற்படுத்தப்பட்டவனும் தாழ்த்தப்பட்டவனும் வந்தால் சாதிப்பாசத்தில் நீதியை வழுவ விட்டுவிடுவார்களாம். இவர்கள்தான் எல்லாவற்றையும் காக்க வந்திருப்பவர்கள். சுப்பனும் குப்பனும் நீதிகேட்டு வந்தால் இறுகிய மனதோடும் கடுமையாக நீதியை நிலைநாட்டும் இந்த கோமகன்கள் ஜெயலலிதா, வேணுகோபால் போன்றவர்களுக்கு மனசாட்சிப்படி பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள் இளகிய மனதோடு பிரசாதம் வழங்குவது எல்லாம் எந்த பாசவகையில் வருகிறது என்பதை நாமேதான் புரிஞ்சுக்கணும்.
இருக்கிறவனுக்கொரு நீதி இல்லாதவனுக்கொரு நீதின்னு பல்லிளிச்ச பின்னாடி என்ன மரியாதை வேண்டி கிடக்கு.


பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவிட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசியம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

வாழ்த்துகள் கலைஞர்....

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தமைக்காக நன்றிகளும் வாழ்த்துகளும்....

என் பார்வையில் 2006 தேர்தல் முடிவுகள் - 1

தேர் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதுபோல் போட்டி கடுமையாக இருந்தாலும் முடிவு தெளிவாகவே வந்திருக்கிறது. தமிழக அரசியல் அடுத்தகட்ட பரிணாமத்தில் வந்திருக்கிறது. கடந்த நூறாண்டுகால வரலாற்றில் தமிழக மக்கள் பல்வேறு வித்தியாசமான அரசியல் தீர்ப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிகஅற்புதமான ஒரு தீர்ப்பாக இதைப் பார்க்கிறேன். தனிக்கட்சி ஆட்சி என்ற நிலையிலிருந்து கூட்டணி தயவிலான ஆட்சி என்று மாறியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளை கொஞ்சம் நிதானமாக ஆராயாலாம் எனும் பேராவல் எனக்குள் எழுந்திருப்பதாலே இந்தப்பதிவு..

அதனால் கொஞ்சம் பழையவைகளைப்பற்றி பேசிவிட்டு பிறகு இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைப் பற்றியும்பேசலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியதின் காரணமாக காங்கிரஸ் ஆரம்பத்தில் தமிழகத்தில் வலுவாக இருந்ததும், திரு.காமராஜர் போன்றதொரு மக்கள்தலைவர் ஆட்சி செய்ததன் பயனாக சுதந்திரத்திற்கு பிறகான முதல் 20ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. காங்கிரஸிற்கு வலுவான மாற்று இல்லை என்று எக்களித்து கொண்டிருந்த வேளையில் பேரறிஞர் அண்ணாத்துரை தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு திமுக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் தனக்கேற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் பயின்று இழந்ததை ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக இலகுவான கூட்டணிச் சவாரியை தேர்ந்தெடுதது. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிய மக்களின் விருப்பமும் தேர்வும் திமுக, எம்ஜிஆர் என மாறியது. மாநிலத்தில் காங்கிரஸின் ஆளுமையும் தகர்ந்து போனது. ஆனால் தங்களுக்கிருந்த குறிப்பிடத்தக்க அளவிலான பாரம்பரிய மக்கள் செல்வாக்கை மிகச்சரியாக பயன்படுத்தி கூட்டணிகள் அமைத்து சவாரி செய்தனர். மத்தியில் ஆட்சியில் இருந்தாலே போதும் என்ற மனோபாவமும், காமராஜருக்கு பின் சுயபுத்தி உள்ளவர் எவரும் தமிழக காங்கிரஸிற்கு வாய்க்காமலே போனதாலும் மத்தியில் அரசாண்டால் போதும் என்று தேசியப்பற்றை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்திய தேசியத்தில் ஒன்றினைந்திருந்தாலும் தொடக்கத்திலிருந்தே தமிழகம் அதற்குரிய மரியாதையையோ, அங்கீகாரத்தையோ பெறவில்லை.மாற்றந்தாய் மனப்பான்மையுடனே நடத்தப்பட்டிருக்கிறது. அதற்குரிய கடுமையான எதிர்வினைகளை தமிழகம் பதிவு செய்திருந்த போதிலும் முற்றிலுமாக எதிர்த்துவிட முடியவில்லை. தேர்தல் அரசியலில் அது முடியாது என்பதும் எதார்த்தமான உண்மை. யாராக இருப்பினும் ஜனநாயக ரீதியில் தேர்தல் அரசியலில் பங்கு பெறும் போது விரும்பியோ விரும்பாமலே சிலவகையான சமரசங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. தேர்தல் அரசியல் என்பது இருமுனைக் கத்தி. குறிப்பாக கொள்கை சமரசங்களுக்கு வெற்றியை பரிசாக தரும் விநோத கத்தி.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்திருந்த பின்பு மக்களுக்கான அரசியல், அவர்கள் பிரச்சனைகள் அதற்குண்டான தீர்வுகள் என்னும் தளத்தை விட்டு தனிமனித ஆதரவு/எதிர்ப்பு அரசியலாக உருமாறிவிட்டது. இதன் பலன் தனிநபர்களுக்கு. இழப்பு மக்களுக்கு! தொடர்ந்து பலகாலமாக ஏமாற்றமடைந்த மக்கள், தங்களுக்கு நேர்ந்த இழப்புகளை உணரத் துவங்கிய போதுதான் மாற்று இயக்கங்களுக்கான விதை தூவப்பட்டது. தாங்கள் வஞ்சிக்கபடுகிறோம் என்பதை பலர் மிகத்தாமதமாகவே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதைத் தீவிரமாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்தது. அதைப் பெற அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பதும் மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கிறதென்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய அரசு அதிகாரச் சமூக அமைப்பில் ஒரு அரசியல் சக்தியாக, அதிகார சக்தியாக உருவெடுக்காமல் தங்களுக்குத் தேவையான எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை புரிந்து கொண்டு அரசியல் தடத்தில் கால்பதிக்க முனைகிறார்கள். பல்வேறு போராட்டங்கள், அடக்குமுறைகளுக்காட்படுதல், இழப்புகள், தோல்விகளுக்கு பின்னரே அவர்களால் கால்பதிக்கவே முடிகிறது. அரசியல் சக்தியாக உருவெடுத்த பின்பும் ஆனால் அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடிவதில்லை. அதற்கும் பல இன்னல்கள் வருகிறது தேர்தல் அரசியலினால். ஆனால் விந்தை அதிகாரம் பெற தேர்தல் அரசியலைத் தவிர வேறு வழியும் இல்லை.
**

தொடரும்

அதிகார உரையாடல்களை உடைப்போம்

அரசு என்பது துப்பாக்கிகளினால் நிலைநிறுத்தப்படவில்லை, வார்த்தைகளினால் ஆன பிரதிகளினால். உலகில் காலகாலமாக அதிகாரமும் அடக்குமுறையும் நிகழ்ந்துகொண்டே வருகிறது. இதில் கவனிக்க வேண்டியது அடக்குமுறையை நிகழ்த்தும் சமூகம் எண்ணிக்கையளவில் மிகக்குறைவானதாக இருப்பதும் அடக்குமுறைக்கு உட்படும் சமூகம் பெரியதாக இருப்பதும். எப்படி இது சாத்தியமாயிற்று. அதன் விடைதான் முதல்வரிகளில்.

நமக்குள் மூன்றுவிதமான சமூக அமைப்புகளை நாம் காணலாம். முதலாவது அடக்குமுறைக்கு உட்படும் அடிமை சமூகம், இரண்டாவது அடக்கும் அதிகார சமூகம், மூன்றாவது தரகு சமூகம்.

வரலாறு என்பது ஒரு சமூகத்தை பற்றிய செய்தியாக, ஆவணமாக, செல்வமாக உணரப்படுகிறது. இதன் மீதான நம்பிக்கைகளே அடுத்தடுத்த தலைமுறைகளை வழிநடத்திச் செல்கிறது. வரலாறுகள் உண்மைகள் என்று பெருவாரியாக நம்பப்படுகிறது. ஆனால் உள்தேடி பயணிக்கும் போது அது அவ்வாறாக இருப்பதில்லை என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.

தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார, ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச் செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது. பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.

எனவே எந்த வகையான விடுதலை என்பதும் நமக்கான மொழியை, உரையாடலை உருவாக்குவதில்தான் இருக்கிறது. மொழி என்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இதிலிருந்து விளங்கும். அடிமை கொள்ள நினைப்பவன் முதலில் தாக்குவது மொழியாகத்தான் இருக்கும். மொழியை சிதைத்தால் அந்த இனத்தை சிதைக்கலாம்.

இந்தியாவின் வரலாறும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. அதிகார சமூகத்தின் உரையாடல்களே பொதுவானதாகி இருக்கிறது. பெரும்பான்மையினரது குரல்கள் நசித்தொழிக்கபட்டிருக்கின்றன. மனிதனை பிறப்பின் ரீதியாக பாகுபடுத்தியிருக்கிறது, அந்த பாகுபாட்டை புராண இதிகாசங்கள், நீதி நூல்கள் தொடர்ச்சியாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பேணிக்காத்து வந்திருக்கிறது. தங்களை அறியாமலே மக்களும் அந்த கருத்துருவாக்கங்களை ஏற்று வாழ்கிறார்கள்.

இன்றைய பல நிகழ்வுகளுக்கு இந்த கூற்றுகளோடு தொடர்பு இருக்கிறது.

ஆமாம்.

இந்தியாவை எடுத்து கொள்ளுங்கள். கிராமங்கள் நிறைந்த நாடு, விவாசாயதை ஜீவாதராமாக கொண்ட நாடு. ஆனால் இந்தியாவாக பிரதிநிதுதுவப்படுத்துவது வேறோன்று. போலியானது. இது அனைத்து தளங்களிலும் நிகழ்கிறது. மக்களின் மரபு, பண்பாடு, வாழ்வியல் முறை, கலாச்சாரம், மொழி, என் அனைத்திலும் பெரும்பான்மை சமூகத்தின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டு அதிகார சமூகத்தின் குரல்கள் திணிக்கப்பட்டு பொதுச்சமூகத்தின் குரலாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டிருக்கிறது.

நமது மண், அது சார்ந்த விசயங்களை பிரதிநிதித்துவப்படுத்தாமல், தொடர்ந்து ஒவ்வாத ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். எல்லாத் துறைகளிலலும் நமது சுயத்தன்மை இழந்து முகமற்று நடமாடுகிறோம். அது பற்றிய பிரக்ஞைகூட இல்லாமலே தலைமுறை தலைமுறையாக வாழப்பழகியும் விட்டோம். நமது சுயம் என்னவென்பதே மறந்து போகும் அளவிற்கு நம்மீது திணித்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிட்டன.

காலணி ஆதிக்கத்தில் இருந்து பெரும்போராட்டம் நடத்தி விடுதலை பெற்றோம் என்று கூறிக்கொள்கிறோம். ஆனால் இன்று நவீன காலணியாதிக்கத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏற்றுக் கொண்டுவிட்டோம்.

இன்றைய நவகாலணியாதிக்கம் பொருளாதார ஏற்றம் என்னும் பெயரில் உள்நுழைகிறது. திறந்த வெளி வணிகம் என்னும் பெயரில் நமக்கு உரிமையான நமது வளங்கள் நமக்கே விற்கப்படுகின்றன. அதுவும் அபரிமிதமான லாபத்தில்.

இந்த சுரண்டலுக்கு தரகு சமூகம் துணை போகின்றது. இந்த நாட்டு மக்களின் நலன்களை புறந்தள்ளி ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நலனுக்காக உழைக்கும் இந்த கூட்டம்தான் இன்று வேகமாக முன்னேறி இருக்கிறது. எல்லாத் துறைகளிலும் தனது மேலாண்மையை வலுவாக நிறுவியுள்ளது. இன்றைய அதிகாரத்தின் மொழி இந்த தரகு சமூகத்தின் மொழியாக இருக்கிறது. இவை மிகத் தெளிவாக பொருளாதார நலன்களை முன்னுறித்தி இயங்குகின்றனர். ஆனால் இந்த வளர்ச்சி பலரை, குறிப்பாக சக மனிதனின் பொருளாதாரத்தை நசுக்கியதால் வருவது என்பதை மறந்து விடுகின்றனர். மறைத்து விடுகின்றனர். பயனடைபவர்களை மட்டும் வெளிச்சப்புள்ளிக்கு கொண்டு வரும் இவர்கள் அதன் பின்னால் இருண்டு கிடக்கும் நிகழ்வுகளை புறக்கணிக்கிறார்கள். நிராகரிக்கிறார்கள்

இந்த அடக்குமுறையை மிக வீரியமாக அரசுகளின் வாயிலாகவும், நீதிமன்றங்கள் வாயிலாகவும், அச்சு, மின் ஊடகங்கள் வாயிலாகவும் செய்து வருகின்றனர். இன்று அரசாங்கங்களும் ஊடகங்களும் யாரும் இந்த மக்களை, மக்களின் நலன்களை பிரதிநிதுத்துவப்படுத்துவதாக இயங்கவில்லை. தொழில் முதலைகளின் பிரதிநிதிகளாகவே இயங்குகின்றனர். இந்த அடக்குமுறையை எதிர்ப்பவர்களையே ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தும் உத்திகளை மிக நுணுக்கமாக கையாள்கிறது.

அடக்குமுறைக்குள்ளானவர்கள் குரல்கள் நசுக்கப்பட்டு அவை இந்த பொதுச் சமுதாய அமைப்பின் நலனுக்கு உகந்ததல்ல என்று நிறுவும் முயற்ச்சியின் வாயிலாக, அந்த குரல்களை சமுக நலனுக்கெதிரான குரல்களாக திரிப்பதிலும், முனைப்போடு செயல்படுவதோடு மட்டுமன்றி அவற்றை பொதுக்கருத்தாக்கி உண்மையென நம்ப வைக்கும் அதிகார அடக்குமுறையையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதுதான் அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அவலங்கள் பொதுவில் தெரிய வரும் போது நம்ப முடியாததாக ஏற்க முடியாததாக இருக்கிறது.

இந்த தரகு சமூகத்தின் அதிகார கருத்துருவாக்கம்தான் இட ஒதுக்கீடு போன்ற சமூக முன்னேற்ற நடவடிக்களை எதிர்க்க வைத்திருக்கிறது.

ஆகையால் இந்த அதிகார கருத்துருவாக்கத்தை உடைத்து, பெரும்பான்மை மக்களின் கருத்துருவாக்கத்தை நிலைபெறச்செய்ய இன்னும் அதிகமாக போராட வேண்டும். இந்த போராட்டம் கால எல்லைகளற்று மாற்று உரையாடலை உருவாக்கி நிலை பெறச்செய்யும் வரை தொடர வேண்டும். இடையிடையே ஏற்படும் தற்காலிகத் தொய்வுகளால் சோர்வடையாது தொடர்ந்து செல்ல வேண்டும்.

தேர்தல் பிரசாரம்: பழ. நெடுமாறனுக்கு அனுமதி

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசியதாக கூறி பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தார் பழ. நெடுமாறன். பின்னர் அவரை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

இந் நிலையில் பழ. நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், வரும் சட்டசபைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை ஆதரித்துத் தேர்தல் பிரசாரம் செய்ய தான் விரும்புவதாகவும், இதற்கு வசதியாக தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நெடுமாறனின் கோரிக்கையை ஏற்று அவரது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டது.
இருப்பினும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசவோ, பத்திரிக்கைகளுக்குப் பேட்டி அளிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

நிபந்தனை தளர்த்தப்பட்டதையடுத்து திமுக கூட்டணிக்கு ஆதரவாக பழ.நெடுமாறன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
**நன்றி- தட்ஸ்தமிழ்.காம்**

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே

தமிழகத்தில் பெரியாரும் அவரது தாக்கம் இன்னும் குறையாதிருப்பது பலருக்கு எரிச்சலைத் தருகிறது/தந்துகொண்டிருக்கிறதும். மனிதனின் இயற்கையான கடவுள் பக்தியைக்கூட இன்று தங்கள் சுயநல உணர்வுகளுக்காக உருமாற்றுதலும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரியாரைப் பற்றிய திரித்தல்களில் ஒன்று அவரது மனைவி இறந்த போது அவர் மகிழ்ந்தவர். அத்தகைய கீழான எண்ணம் கொண்டவர் என்று நிறுவ படாதபாடு படுகிறார்கள். நாகம்மையாரின் மறைவு பெரியாருக்கு எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் அவரரே பதிவு செய்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாகம்மையார் மறைந்த மூன்று நாட்கள் கழித்து ''குடிஅரசில்'' அவர் எழுதிய தலையங்கத்தின் சில பகுதிகள்..(14.5.33)

நாகம்மாள் மறைவு - எல்லாம் நன்மைக்கே..

''எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.33 தேதி ஆவி நீத்தார். நாகாம்மாளை நான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை...

நான் சுயநலவாழ்வில் 'மைனராய்', 'காலியாய்', 'சீமானாக', இருந்த காலத்திலும் பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் துறையின் முற்போக்குக்கும் நாகாம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தாள் என்பது மறுக்கமுடியாத காரியம். பெண்கள் சுதந்திர விஷயமாகவும் பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கின்றேனோ அதில் நூறில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை..

நாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு வினாடியும் உணர்ந்தே வந்தேன். ஆகவே நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா? இன்பம் போயிற்றென்று சொல்லட்டுமா? உணர்ச்சி போயிற்றென்று சொல்லட்டுமா? எதுவுமே விளங்கவில்லையே.

நாகம்மாளை அற்ப ஆயுளென்று யாரும் சொல்லிவிட முடியாது. அவருக்கு 48 வயது ஆனபோதிலும் அது இந்திய மக்களின் சராசரி வாழ்நாளாகிய 23.5 வயதிற்கு இரட்டிப்பென்றே சொல்ல வேண்டும். நாகம்மாள் செத்ததை ஒரு துக்க சம்பவமாகவும், ஒரு கஷ்ட சம்பவமாகவும் கருதாமல் அதை ஒரு மகிழ்ச்சியாகவும், லாபமாகவும் கருத வேண்டுமென்றே நான் ஆசைப்படுகிறேன்

''--- கடந்த 2,3 வருசங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும்( சங்கரச்சாரிகள் போல - ஆனால் அவ்வளவு ஆடம்பரத்துடன் பணவசூலுக்கல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப்பயணத்திலேயே இருக்கவேண்டும் என்றும், நமக்கென்று ஒரு வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்திரவாசமோ இருப்பது கூடாதென்றூம் கருதி வந்ததுண்டு. அதற்கு வேறு எந்த தடையும் இருந்திருக்கவில்லை என்றாலும் நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தாள். இப்போது அந்தத் தடை இல்லாது போனது ஒரு மகிழ்ச்சிக்குரியக் காரியமாகும். ஆதலால் நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையே தருவதாகும்''
*
இதுதான் பெரியார்... வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே சிந்தித்த உண்மையான மகாத்மா.. தன் இழப்புகள் கூட மக்களுக்கான தன் பயணத்திற்கு ஒரு வசதி என்று நினைத்தவர் பெரியார். அதைத் திரிப்பவர்களெல்லாம் வக்கிரங்கள் பீடிக்கப்பட்ட மனநோயாளிகள். அவர்கள் முறையான சிகிச்சை பெற்று நலவாழ்வு வாழவேண்டும் என்பதே என் அவா
**நன்றி**
குடி அரசு 14.5.33
''ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்''- என்.ராமகிருஷ்ணன்

கனவு மெய்ப்படவேண்டும்


வாக்களிப்பீர்!! வெற்றி பெறச்செய்வீர்!!!

மதுரை - 1

மதுரை

வடக்கு கோபுரம்

ஆயிரங்கால் மண்டபம்



பொற்றாமைரைக் குளம்



அமீரகத்தில் ''தை'' வெளியிட்டு விழா.




துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக, அண்ணன் அறிவுமதி அவர்களால், தமிழுக்காகவும், தமிழர்களின் இலக்கியங்களை பதிவு செய்வதற்காக, தொடங்கப்பட்டிருக்கும் ''தை'' கவிதைக் காலாண்டிதழ் அமீரகத்தில் வெளியிடப்பட இருக்கிறது. அமீரகத்தில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளும் பங்கேற்க இந்த நிகழ்ச்சி வருகிற 09.03.2006 வியாழன் இரவு 8.00 மணி அளவில் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் பவன் அரங்கில் நடைபெற இருக்கிறது.

அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் தலைவர் திரு.அப்துல் கதீம் அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

கவிதை ஆர்வலர்கள் அனைவரையும் இந்த விழாவிற்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

''தை'' கவிதைக் காலாண்டிதழ் குறித்த அறிமுகம் நக்கீரன், கீற்று, வார்ப்பு ஆகிய இதழ்களில் ஏற்கனவே வந்திருக்கிறது. நண்பர்களின் பார்வைக்காக
http://www.nakkheeranbiweekly.com/ (இலக்கியம் நக்கீரன்)
http://www.keetru.com/literature/essays/thai.html
http://www.vaarppu.com/php/book_intro.php

மேலும் தொடர்புகளுக்கு:
இ.இசாக்: 050-3418943, நண்பன்:050-8497285, கவிமதி:050-5823764, முத்துகுமரன்:050-6243115, ந.தமிழன்பு:050-8802541

பீயள்ள வருகிறார் சுஜாதா

தன்னையும் தலித் இலக்கியவாதியாக கருத வேண்டும் என்று கூறிய சுஜாதாவிற்கு எழுத்தாளர் அழகியபெரியவன் தலித்முரசில் எழுதி இருக்கும் கட்டுரை http://www.keetru.com/dalithmurasu/feb06/azhakiya_periyavan.html

அந்தமானைப் பாருங்கள் அழகு











Related Posts with Thumbnails