Showing posts with label ஜனநாயகம். Show all posts
Showing posts with label ஜனநாயகம். Show all posts

தேசியப் பூச்சாண்டிகள்

அய்யகோ பிரிவினைவாதம் பேசுகிறார்கள்! தேசத் துரோகிகள் நடமாடுகிறார்கள் என்ற கவலையோடு தீடிரென பெருக்கெடுத்து ஓடுகிறது சிலருக்கு நாட்டுப்பற்று. புவியியல் எல்லைக்கோடுகள் என்பது காலத்தின் மாற்றத்தோடும், அதிகாரப் போராட்டத்தோடும், இன உணர்வுகளோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதை புரிந்து கொள்ள இயலாத, வரலாறுகளை பற்றிய எந்தவிதப் பார்வையுமில்லாதவர்கள் அல்லது வரலாற்றினை ஏற்க மறுத்து தன் விருப்பம்தான் அனைவரும் ஏற்க வேண்டிய ஒன்று என்று எண்ணிக் கொள்பவர்கள் எல்லாம் இன்றைக்கு தேசபக்தர்களாக அவதாரம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறைந்த பட்சம் இந்த உன்னத தேசபக்தர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஒருமுறையாவது வாசித்துவிட்டு இக்கூக்குரலை எழுப்புவார்களாயின் அதில் அர்த்தம் இருக்கும். இந்திய யூனியன் இதுதான் நம் அரசியலைப்புப்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை. பல்வேறு இனக்குழுக்கள், தேசியத் தன்மைகள், சமூக பழக்க வழக்கங்கள், மொழிகள் எனத் தத்தமது தனித்தன்மைகள் கொண்ட மக்களின் ஒருங்கிணைவே இந்தியா. இந்த அடிப்படையே புரியாமால் இந்திய குடியரசு ஒற்றைத் தன்மையுடையது என்று எவரேனும் சொல்வாராயின் அவரின் மூளை வளர்ச்சியை பரிசோதனைக்குள்ளாக்கதான் வேண்டும். இந்தியா பன்முகத் தன்மையுடையது. 'இந்து'யா தான் ஒற்றைத் தன்மை உடையது.

இன்றைய இந்தியாவின் ஒரு அங்கம் தமிழ்நாடு! 1947லிருந்து மட்டுமே அது இந்தியாவின் அங்கம். அத்ற்கு முன்பாக அதற்கென்று தனித்த வரலாறு உண்டு. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். இவை அனைத்தும் பாடபுத்தகங்கள் வழியாக இந்திய அரசாங்கமே ஒத்துக்கொண்ட விசயங்களாகும். அதனால் தமிழ்நாடு என்பதன் அடையாளம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதோடு முடிவதல்ல. அதற்கென்று கடந்த கால வரலாறுகள் உள்ளன. அரசுகள் இருந்திருக்கின்றன, ஆட்சியமைப்பு இருந்திருக்கிறது. அந்த நிலையிலிருந்து இன்று இந்தியாவின் பகுதியாகி இருக்கிறது. இது கால, அரசியல் சூழல்களின் விளைவினால் ஏற்பட்ட ஒன்றாகும். இது ஒரு தொடர்ச்சியான இயக்கவியல் நிலை.

எந்த ஒரு அரசோடும் இணக்கமாக இருக்கவும் பிணக்கங்கள் தோன்ற காரணமாக இருப்பது அந்த அரசு தன் அதிகாரத்திற்குட்பட்ட குடிகளை நடத்தும் விதத்தை பொருத்தே அமைகின்றது. சம உரிமைகள் அளிக்கப்பட்டிருக்கின்ற வரை இணக்கம் மிகுந்து இருக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கு உள்ளாக்கப்படும் போதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் போதும் அது இணக்கத்தின் தன்மையை குறைக்கத் தொடங்கும், அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது அது எதிர்ப்பினை நோக்கி இட்டுச் செல்லும். எதிர்ப்பவனை அந்த சூழலலுக்கு இட்டுச் செல்வது அரசுகளே அன்றி மக்கள் அல்ல.

மாற்றுக் கருத்தை வெளியிடவே கூடாது!
உணர்வுடையவனாக இருக்க கூடாது!
ஒடுக்குமுறையை எதிர்க்க கூடாது!
கேள்வி கேட்கக்கூடாது!
தவறான அணுகுமுறையினை விமர்சிக்க கூடாது!
எம் மக்களை சமமாக நடத்து என்று கேட்கக்கூடாது!

கூடாதுகளின் கூடாரமே ஜனநாயகம் என்ற கூப்பாடு வேறு

சாதிப் பிரிவனையால் பிளந்தே கிடக்கிறது தேசம்! பக்தர்கள் அதை உணரவில்லையோ!

ஓ! அதுதான் உம் தர்மமன்றோ!

பிரிவினைவாதிகள் என்று பட்டம் சூட்டும் முன்பு அவர்கள் சொல்ல வருவது என்று கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் பெருஞ் ஜனநாயக விழுது வேர் கம்புகளே!

பிரச்சனைகளை விவாதிக்க வாருங்கள், அனுமதியுங்கள் இல்லையேல் சர்வாதிகாரம் செய்கிறோம் என்று அறிவித்து விடுங்கள்.

அப்புறமா காட்டலாம் பூச்சாண்டி
Related Posts with Thumbnails