அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்

வாழ்த்துகள் கலைஞர்....

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று ஆணை பிறப்பித்தமைக்காக நன்றிகளும் வாழ்த்துகளும்....

என் பார்வையில் 2006 தேர்தல் முடிவுகள் - 1

தேர் நிலைக்கு வந்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னதுபோல் போட்டி கடுமையாக இருந்தாலும் முடிவு தெளிவாகவே வந்திருக்கிறது. தமிழக அரசியல் அடுத்தகட்ட பரிணாமத்தில் வந்திருக்கிறது. கடந்த நூறாண்டுகால வரலாற்றில் தமிழக மக்கள் பல்வேறு வித்தியாசமான அரசியல் தீர்ப்புகளைத் தந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் மிகஅற்புதமான ஒரு தீர்ப்பாக இதைப் பார்க்கிறேன். தனிக்கட்சி ஆட்சி என்ற நிலையிலிருந்து கூட்டணி தயவிலான ஆட்சி என்று மாறியிருக்கிறது.

தேர்தல் முடிவுகளை கொஞ்சம் நிதானமாக ஆராயாலாம் எனும் பேராவல் எனக்குள் எழுந்திருப்பதாலே இந்தப்பதிவு..

அதனால் கொஞ்சம் பழையவைகளைப்பற்றி பேசிவிட்டு பிறகு இந்த தேர்தல் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைப் பற்றியும்பேசலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

தேசிய விடுதலைப் போராட்டத்தை நடத்தியதின் காரணமாக காங்கிரஸ் ஆரம்பத்தில் தமிழகத்தில் வலுவாக இருந்ததும், திரு.காமராஜர் போன்றதொரு மக்கள்தலைவர் ஆட்சி செய்ததன் பயனாக சுதந்திரத்திற்கு பிறகான முதல் 20ஆண்டுகள் அதிகாரத்தில் இருந்தது. காங்கிரஸிற்கு வலுவான மாற்று இல்லை என்று எக்களித்து கொண்டிருந்த வேளையில் பேரறிஞர் அண்ணாத்துரை தலைமையில் பெரும்பான்மை பலத்தோடு திமுக ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் தனக்கேற்பட்ட தோல்வியிலிருந்து பாடம் பயின்று இழந்ததை ஆட்சி அதிகாரத்தை மீட்டெடுப்பதற்கு பதிலாக இலகுவான கூட்டணிச் சவாரியை தேர்ந்தெடுதது. திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிய மக்களின் விருப்பமும் தேர்வும் திமுக, எம்ஜிஆர் என மாறியது. மாநிலத்தில் காங்கிரஸின் ஆளுமையும் தகர்ந்து போனது. ஆனால் தங்களுக்கிருந்த குறிப்பிடத்தக்க அளவிலான பாரம்பரிய மக்கள் செல்வாக்கை மிகச்சரியாக பயன்படுத்தி கூட்டணிகள் அமைத்து சவாரி செய்தனர். மத்தியில் ஆட்சியில் இருந்தாலே போதும் என்ற மனோபாவமும், காமராஜருக்கு பின் சுயபுத்தி உள்ளவர் எவரும் தமிழக காங்கிரஸிற்கு வாய்க்காமலே போனதாலும் மத்தியில் அரசாண்டால் போதும் என்று தேசியப்பற்றை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்திய தேசியத்தில் ஒன்றினைந்திருந்தாலும் தொடக்கத்திலிருந்தே தமிழகம் அதற்குரிய மரியாதையையோ, அங்கீகாரத்தையோ பெறவில்லை.மாற்றந்தாய் மனப்பான்மையுடனே நடத்தப்பட்டிருக்கிறது. அதற்குரிய கடுமையான எதிர்வினைகளை தமிழகம் பதிவு செய்திருந்த போதிலும் முற்றிலுமாக எதிர்த்துவிட முடியவில்லை. தேர்தல் அரசியலில் அது முடியாது என்பதும் எதார்த்தமான உண்மை. யாராக இருப்பினும் ஜனநாயக ரீதியில் தேர்தல் அரசியலில் பங்கு பெறும் போது விரும்பியோ விரும்பாமலே சிலவகையான சமரசங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. தேர்தல் அரசியல் என்பது இருமுனைக் கத்தி. குறிப்பாக கொள்கை சமரசங்களுக்கு வெற்றியை பரிசாக தரும் விநோத கத்தி.

திமுகவிலிருந்து எம்ஜிஆர் பிரிந்திருந்த பின்பு மக்களுக்கான அரசியல், அவர்கள் பிரச்சனைகள் அதற்குண்டான தீர்வுகள் என்னும் தளத்தை விட்டு தனிமனித ஆதரவு/எதிர்ப்பு அரசியலாக உருமாறிவிட்டது. இதன் பலன் தனிநபர்களுக்கு. இழப்பு மக்களுக்கு! தொடர்ந்து பலகாலமாக ஏமாற்றமடைந்த மக்கள், தங்களுக்கு நேர்ந்த இழப்புகளை உணரத் துவங்கிய போதுதான் மாற்று இயக்கங்களுக்கான விதை தூவப்பட்டது. தாங்கள் வஞ்சிக்கபடுகிறோம் என்பதை பலர் மிகத்தாமதமாகவே உணர்ந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அதைத் தீவிரமாக எதிர்க்க வேண்டியதன் அவசியத்தையும் புரிந்தது. அதைப் பெற அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்பதும் மிக அத்தியாவசியத் தேவையாக இருக்கிறதென்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இன்றைய அரசு அதிகாரச் சமூக அமைப்பில் ஒரு அரசியல் சக்தியாக, அதிகார சக்தியாக உருவெடுக்காமல் தங்களுக்குத் தேவையான எந்த வித மாற்றங்களையும் ஏற்படுத்திவிட முடியாது என்பதை புரிந்து கொண்டு அரசியல் தடத்தில் கால்பதிக்க முனைகிறார்கள். பல்வேறு போராட்டங்கள், அடக்குமுறைகளுக்காட்படுதல், இழப்புகள், தோல்விகளுக்கு பின்னரே அவர்களால் கால்பதிக்கவே முடிகிறது. அரசியல் சக்தியாக உருவெடுத்த பின்பும் ஆனால் அவ்வளவு எளிதாக அவர்களால் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடிவதில்லை. அதற்கும் பல இன்னல்கள் வருகிறது தேர்தல் அரசியலினால். ஆனால் விந்தை அதிகாரம் பெற தேர்தல் அரசியலைத் தவிர வேறு வழியும் இல்லை.
**

தொடரும்
Related Posts with Thumbnails