சேரனின் முத்தையாவும் என் முத்துவும்:


இந்த பதிவு என் அம்மா அப்பாவிற்காக.......




நச்சுப் புகைகளுக்கு மத்தியில் சுத்தமான காற்றை சுவாசித்தது போல, புட்டிப்பாலுக்குப் பதில் தாய்ப்பால் குடித்தது போன்ற திருப்தியை தந்தது சேரனின் ‘’தவமாய் தவமிருந்து’’. நேற்று முன் தினம் இரவுதான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.. பெற்றோர்களை விட்டுப் பிரிந்து வேறொரு நாட்டின் தனிமைச் சுழலில் பார்த்தது இன்னும் அதிகமான தாக்கத்தை என்னுள் எழுப்பி இருக்கிறது. மூன்று மணி நேரம் என் வீட்டிற்குள் இருப்பது போலவே இருந்தது. முத்தையாவிற்குள் பலமுறை என் அப்பா முத்து வந்து விட்டுப் போனார். கடந்த வந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையில் கண்ட போது கண்களில் நீர் முட்டி நின்றதை தவிர்க்க முடியவில்லை. திரைப்படங்களில் எதார்த்த வாழ்வில் நிகழவியலா எத்தனையோ புனைவுகளை பார்த்து சலித்திருந்த கண்களுக்கு, உண்மையை காணும் வாய்ப்பு கிடைக்கச் செய்த சேரனுக்கு நன்றி.

சேரன் படம் வெளிவருவதற்கு முன்பே சொல்லியிருந்தார். இந்த படத்தின் முத்தையா பார்க்கும் ஒவ்வொருவரின் தந்தையாகவே காட்சியளிப்பார் என்று. நூறு விழுக்காடு சரியே. படத்தை பற்றிய விமர்சனங்கள் ஏற்கனவே வந்து விட்டன. அதனால் அதைப்பற்றி நீட்டி முழக்கப்போவதில்லை. இதுவும் குறைபாடுகளுடன் வெளிவந்திருக்கும் படம்தான். அவைகளும் ஏற்றுக்கொள்ள கூடியவைகளே. சேரன் தேர்ந்தெடுத்த கதைக்களம் அற்புதமான ஒன்று. மனித உறவுகளை படிப்பதுதான் வாழ்வின் உயர்ந்த படிப்பாக இருக்கும். அந்த வகையான தேடல்களோடு இந்த படத்தின் ஊடாக பயணித்திருக்கிறார். படத்தை பற்றியான விமர்சனங்களுல் ஒன்று நீளமாக இருக்கிறது. காட்சிகளை இழுத்திருக்கிறார். கதைநாயகன் இறந்த பின்பும் படத்தை முடிக்க மனமில்லாமல் இழுத்திருக்கிறார். உறவுகளை நாம் எப்போதும் அறிவுப்பூர்வமாக அணுகுவதில்லை. உணர்வுப்பூர்வமாக அணுகுகிறோம். நம் வாழ்க்கை எப்போதும் விறுவிறுப்பாக செல்லக்கூடிய ஒன்றல்ல. எல்லாவித ஏற்ற இறங்களோடுதான் செல்லக்கூடியவை. நம் வாழ்விலே நாடகத்தனமாய் பல நிகழ்வுகளை நடத்திக்கொண்டே திரையில் வருவதை நாடகத்தனம் என்று சொல்லிக் கொள்கிறோம். மார்புப் பிளவுகளையும் இடுப்பின் வளைவுகளையும் நீண்ட நேரம் இடம் பெறுவதை எதிர்பார்க்கும் மனம் பெற்றோர்களுடனான உரையாடல்கள் நீண்டுவிட்டதற்காக விமர்சனம் என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கிறது. இந்தப்படத்தில் சேரன் சரியாக கையாளத பகுதி என்பது சென்னை வாழ்க்கைதான். அங்குதான் அவர் தடுமாற்ற நிலைக்கு வந்துவிடுகிறார். கதையின் நாயகர்களின் மீது கழிவிரக்கம் உண்டு பண்ணுவதற்காக அவர் அமைத்திருந்த காட்சிகள் சரியானதாக இல்லை. வெளிப்பட்ட விதத்தில்தான் அங்கு குறை இருக்கிறதே தவிர அவரின் சிந்தனை சரியான தளத்திலே சென்றிருக்கிறது. இதை பின்பு தொடர்கிறேன்.



ஒரு நடுத்தரவர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தி இருந்தார்ராஜ்கிரன். நந்தா திரைப்படத்தின் மூலம் அவரின் நடிப்பின் ஆளுமை தெரியவந்தது. இந்த படத்தில் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். ஒவ்வொரு சூழலிலும் மாறும் முகபாவங்கள், அதை வெளிப்படுத்தும் வகையில் அவரது உடம்பின் ஒவ்வொரு பாகங்களுமே நடித்துள்ளன. சொல்ல்லிக் கொண்டு போனால் படம் முழுவதும் சொல்லிக் கொண்டு போகலாம்.

என்னை கரைத்த காட்சிகள் சில..

தீபாவளிக்கு பிள்ளைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போய் விடுமோ ஒன்று உடைந்து போய் உட்கார்ந்திருக்கும் பொழுது வரும் தொலைபேசி அழைப்பு, அதைத் தொடர்ந்து இளவரசுவை அழைக்க ஓடும் காட்சி...

சுற்றுலா செல்லமுடியாத ஏக்கத்திலிருக்கும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காட்டும் காட்சி, குறிப்பாக முயல் பிடிக்கும் காட்சி...

படிக்க வைப்பதற்காக கடன் கேட்டு நிற்கும் காட்சி
...

கல்லூரியில் சேர்த்துவிட்டு நெஞ்சை நிமிர்த்துவிட்டு வரும் அந்த காட்சி
இந்த காட்சியை கண்ட போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 1997 வருடம் என்னை பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக என் தந்தை அலைந்து கொண்டிருந்த நேரம், கையில் எந்த வித சேமிப்பும் கிடையாது. அரசுப்பணி, ஒற்றை வருமானம்தான், வட்டிக்கு வாங்கித்தான் எல்லாமே செய்யக்கூடும் என்ற நிலை, சொந்தக்காரர்கள் எல்லோரும் அறிவுரை சொன்னார்கள் அகலக்கால் வைக்காதே, படிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டு கடங்காரனா ஆகி நிக்காதே என்று அறிவுரைகள், எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு என்னை படிக்க வைத்தார். அவருக்கு முதலில் நம்பிக்கை கொடுத்தது அம்மா. என்ன செல்லம்( அம்மாவை அப்பா இப்படிதான் அழைப்பார்) செய்யலாம் என்று கேட்டபோது தாலிக்கொடியையும், காதில் போட்டிருந்து தோடு, மூக்குத்தியை தவிர்த்து அத்தனை நகைகளும் எடுத்து அப்பாவிடம் கொடுத்து இதை அடகு வைத்து முதலில் பணம் புரட்டிட்டு வாங்க என்று சொன்னார். நான் துபாய் வந்த பின்புதான் அது மறுபடியும் என் அம்மாவிடம் திரும்ப வந்தது. வாங்கும் கடனுக்கு வட்டி, வைத்த நகைக்கு வட்டி, கெடு முடிந்தவுடன் பணம் புரட்டி திருப்புவது பின்பு மறு அடகு வைப்பது என ஓடிய எட்டாண்டு வாழ்க்கை அது. முத்துவோ, முத்தையாவோ, அவர்களுக்கு முதுகெலும்பாய் இருப்பது முத்தம்மாளும், சாரதாக்களும் தான்.

ஆனால் நாம் இன்று முத்தையாவை பற்றியாவது பேச ஆரம்ப்பித்து இருக்கிறோம். ஆனால் அதில் சமபங்கு உழைத்த சாரதாக்களின் தியாகங்களை சரியான அளவில் உணர்ந்திருக்கிரோமா என்பது கேள்விக்குறிதான். எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை என் அம்மாவிற்கு பிடித்தது எது என்பதை தெரிந்து கொண்டது கிடையாது. அம்மாவின் தேவைகள் என்ன என்று ஒருமுறை கூட சிந்தித்தது கிடையாது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இந்த கேள்விகள் என்னை துளைத்து எடுத்துவிட்டன. நம் சமூக அமைப்பு நம்மை அந்த அளவில்தான் வைத்திருகிறது. இது போன்ற சூழல்களில் நம் தாய்மார்களின் குடும்ப நிர்வாகம் எத்துனை திறமையானது. பொருளாதார நெருக்கடிகளை அவர்கள் கையாளும் விதம், தன் சக்திக்குட்பட்டு வருவாயை பெருக்க அவர்கள் செய்யும் போராட்டங்கள், அவை எதுவுமே கவனம் பெறாமலே போய்விடுகிறது. படத்தில் ஒரு காட்சி காதலிக்கு பரிசளிப்பதற்காக பணம் வாங்கிச் செல்லும் காட்சி, பையனின் படிப்பிச் செலவிற்கு வேண்டுமென்று தோடும் அடகு கடைக்கு போய்விடும்.தன் கணவன் சைக்கிள் இல்லாவிட்டால் எவ்வளவு சிரமப்படுவான் என்பதை உணர்ந்து கணவனையும் குழைந்தையாக்கி பார்க்கும் அந்த இடம் தாய்மையின் உன்னதத்தை சொன்ன இடம். எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன். நானும் சில வேளைகளில் என் மகிழ்விற்கென பணம் கேட்ட போதெல்லாம் இப்படி ஏதாவது ஒன்றைத்தானே அடமானம் வைத்து அனுப்பி இருப்பார்கள்??

அதே மாதிரி வாழ்க்கையில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களை திசைமாற வைக்கக்கூடியது காதலும் காமமும். அதை மிகச் சரியாக எடுத்தாண்டிருந்தார் சேரன். ஏனென்றால் வளரத்துடிப்பவர்களின் வாழ்க்கைப் போக்கை மாற்றக்கூடியவை இந்த உணர்வுகள். இது இரண்டைப் பற்றிய தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அந்த உணர்வுகளை சரியான வகையில் கையாளத்தெரியாமல் தடுமாறுவது உண்டு.இதை சரியான முறையில் சொல்லியிருந்தார் சேரன். பாவம் குஷ்பு போன்ற அம்மாக்கள் வசந்திகளுக்கு இல்லைததால்தான் இத்தனை பிரச்சனை. காமம் என்பது வெறும் உடல் இச்சை தீர்ப்பதோடு முடிவதில்லை. அது பல்வேறு சூழல்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிக்கலை சொல்வதில்தான் சற்று மிகைப்படுத்தி விட்டார். சென்னையில் அவர்களின் வாழ்க்கை நிலையை சித்தரிப்பதில் கொஞ்சம் தடுமாறி விட்டார். ஒரு சில நிமிடத் தவறுகள் வாழ்வின் திசையை எவ்வளவு தூரம் மாற்றக்கூடியது என்று சொல்ல முயற்ச்சித்தது ஒரு குடும்பத்தில் பெரியவர்கள் செய்யும் பொறுப்பான செயல். அந்த வகையில் சேரனை இளைஞர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்.

சரண்யாவின் சிறந்த நடிப்பிற்கு சேரன் தன் குழந்தையை அவர் கால்மாட்டில் வைக்கும் காட்சி.பச்சப்ப்பிள்ளையின் அழுகை அவருக்குள் இருக்கும் தாய்மை உணர்வை கிள்ள தன் வைராக்கியத்தை காப்பாற்ற முனைந்து முடியாமல் உடைந்து பிள்ளையை தூக்குவாரே.கண்ணீர் பொத்துக்கொண்டு வந்து விட்டது. இந்த இடத்தில் மனம் அப்படியே லேசாகிப்போனது. சீக்கிரம் குழந்தையை தூக்கவேண்டும் என்று மனம் துடிக்கவைத்தைருந்தது அற்புதமான காட்சி.

சேரன் மதுரையில் வீடு பார்த்திருப்பதை தெரிவிக்கும் காட்சி, அந்த இடத்தில் ராஜ்கிரனின் சிரிப்பு எனக்கு என் அப்பாவின் ஞாபகம் வந்துவிட்டது. மே 31 2004 அப்பா பணி ஓய்வு பெறுகிறார். எனக்கு துபாயில் வேலை மே 18ம் தேதி கிடைத்தது. அவரது பணிக்காலத்தின் கடைசி பன்னிரண்டு நாட்களை மிக மகிழ்வோடு கழித்தார். அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள் எல்லாம் சொன்னது 8 வருசத்தக்கப்புறம் இப்பதான் நீங்க சிரிச்சு பாக்குறோம் சார்ன்னு. பணி ஓய்வு விழாவில் இதைக் குறிப்பிட்டு சொன்ன அப்பா கடைசி பத்து நாளாத்தான் நான் நிம்மதியா தூங்கிறேன். அதுக்கு ஆண்டவனுக்கு நன்றி. எனக்கு கை கொடுக்க பையன் வந்துட்டான் பெருமையோடு சொன்னப்ப எனக்கு பேசுறதுக்கு வார்த்தையே இல்லை. அப்போது அவர் கண்ணீரோடு சிரித்த சிரிப்பு இருக்கிறதே என் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. அதே மாதிரியான உணர்ச்சியை ராஜ்கிரன் வெளிப்படுத்தி இருந்தார்.

அதே மாதிரி என் அம்மா கல்லூரியில் என்னை சேர்க்க வந்திருந்தது. அதுவரை வீட்டை விட்டு பிரிந்ததே இல்லை. திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் இருவருக்கும் என் மேல் ரெம்ப பிரியம். அப்பாவுக்கு கொஞ்சம் அதிக பிரியம். நான் மதுரையில் பிறந்தேன். அப்பா அப்போது திருவரங்கத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். தினமும் என்னை பார்க்க திருச்சியிலிருந்து மதுரைக்கு வருவாராம். நான் குறை மாதப்பிள்ளை(7 மாதம்) என்பதால் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பல்வேறு விதமான உடல் உபாதைகள் வேறு. அந்தவகையில் அவர்களுக்கு என் பிரிவு மிகவும் கனமானது. கல்லூரியில் விட்டு ஊருக்கு கிளம்பும் போது அம்மா கண்ணில் தண்ணீர் வந்துவிட்டது. தவமாய் தவமிருந்த்தில் இதே காட்சி வந்த போது எனக்கு தெரிந்தது சரண்யா அல்ல என் அம்மாதான்.

படம் நெடுக ராஜ்கிரனை பிடித்தாலும் நான் மிகவும் ரசித்தது சென்னை வீட்டில் வந்து அவர் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கும் காட்சி.. வருத்தம், ஏமாற்றம், இயலாமை என அத்தனைக்கும் மவுன சாட்சியாய் அமைந்திருக்கும் காட்சி அது.



படத்தில் இசை மிகப் பெரிய குறை. பல நேரங்களில் மனசு மொட்டை இருந்தா எப்படி இருந்திருக்கும் என்று நினைத்தது.

படத்தின் சின்ன சின்ன குறைகள் கிளறிவிடப்படிருந்த உணர்ச்சிக் குவியல்களின் முன்னால் ஒன்றுமில்லாதது போலவே இருந்தது. காட்சிகள் நகங்கள் என்றால் சேரன் நறுக்கி எறிந்திருப்பார். ஆனால் எல்லாம் ரத்தமும் சதையாக இருப்பதால்தான் கத்திரிக்க முடியாமல் தவித்து விட்டார். இது போன்ற முயற்ச்சிகள் தமிழில் தொடர்ந்து நடக்க வேண்டும். உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பிழந்து இயந்திர சூழலில் வாழத் தள்ளப்பட்டிருக்கும் வேளையில் நாம் நம் வேர்களை மறக்காமல் இருப்பது முக்கியம். அந்நியன் போன்ற கழிவுகளுக்கு மத்தியில் இது மிகவும் அவசியத் தேவையாய் இருக்கிறது. கழிவுகளை பிரம்மாண்டங்கள் மூலம் சந்தனமாக பரப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் சேரன் போன்ற படைப்பாளிகள் வெற்றி பெறுவது நம்பிக்கை தருகிறது.

23 மறுமொழிகள்:

ENNAR said...

--ஒரு நடுத்தரவர்க்கத்தின் தந்தையர்களின் உணர்வை மிகத்துல்லியமாக--
நன்றாக உள்ளது

தருமி said...

கண்ணீர்த் திரைக்குள்ளேதான் இந்தப் பதிவை வாசித்தேன். ஒரு சந்தோஷம் - நான் மட்டும்தான் முட்டாள் மாதிரி கதை, சினிமா இவைகளில் மனம் ஒன்றி கண்ணீர் விடுகிறேனோ என்று நினைத்திருந்தேன்; அப்படியெல்லாம் இல்லை; நாங்களும் அப்படித்தான் என்று அறிந்த போது ஒரு சந்தோஷம்தான்.

பரஞ்சோதி said...

முத்துக்குமரன்,

அருமையான படத்தை விமர்சனம் செய்திருக்கும் விதம் அருமையோ அருமை.

நானும் படம் நெடுக்க கண்களில் நீர் கசிய பார்த்தேன், எனக்கு ராஜ்கிரண் இடத்தில் என் தாயாரை வைத்து பார்த்தேன்.

இத்தனை எளிதாக சம்பாதிக்கும் போதே இத்தனை கஷ்டங்கள் இருக்கிறதே, அன்று கிராமத்தில் ஒன்றுமே இல்லாமல் எப்படி தான் எங்களை வளர்த்தாரோ என்று நினைக்கும் போது இப்போ கூட கண்ணீர் வருது.

சேரனுக்கு கண்டிப்பாக தமிழ் சினிமாவில் சிறப்பான இடமுண்டு, அவரது படங்களுக்கு நாமும் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

முத்துகுமரன் said...

நன்றி என்னார். தொடர்ந்து எல்லா பதிவுகளையும் வாசித்து, கருத்து தெரிவித்து நீங்கள் அளிக்கும் உற்சாகத்திற்கு நன்றி.

முத்துகுமரன் said...

//எனது அப்பாவிடம் சண்டை போடுவது உண்டு.
வழ்க்கையில் நடைமுறை பழக்க வழக்கங்கள் சொல்லித்தரவில்லை?எனது சொந்தக்காலில் நிற்க்கவேண்டி வரும்பொழுது ஏற்ப்பட்ட கசப்பான அனுபவம்//

என்ன செய்வது சிவனடியார். அது அவர்களுடைய சூழல். பின் தங்கிய நிலையில் இருந்து முன்னுக்கு வரும் போது இது போன்ற நிகழ்வுகளை எல்லாம் தாண்டித்தான்வரவேண்டியிருக்கிறது.அது அவர்கள் பிழையன்று. அது போன்றதொரு நிலமையை நாம் அடுத்த தலைமுறைக்கு ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில்தான் உறூதி எடுக்க வேண்டும்.
கருத்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி

முத்துகுமரன் said...

//கண்ணீர்த் திரைக்குள்ளேதான் இந்தப் பதிவை வாசித்தேன். //

மிக்க நன்றி தருமி ( அய்யா என்று அழைக்கலாமா?). எழுதும் போது எனக்கு பழைய நினைவுகள் வர ஈரமனநிலையில்தான் இப்பதிவை எழுதினேன்.

//ஒரு சந்தோஷம் - நான் மட்டும்தான் முட்டாள் மாதிரி கதை, சினிமா இவைகளில் மனம் ஒன்றி கண்ணீர் விடுகிறேனோ என்று நினைத்திருந்தேன்; அப்படியெல்லாம் இல்லை; நாங்களும் அப்படித்தான் என்று அறிந்த போது ஒரு சந்தோஷம்தான்.//

எல்லா படங்களிலும் நாம் அவ்வாறு ஒன்றீப் போய்விடுவதில்லையே. எங்கு நம்மை காண்கிறமோ அங்கு நாம் உணர்ச்சிவசப்படுவது தடுக்க முடியாததாய்தான் இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Pot"tea" kadai said...

அழுது அரற்றிய திரைப்படம்! படம் பார்த்துவிட்டு என் அண்ணனிடமும், என் தந்தையிடமும் காரணமேயின்றி அழுதுவிட்டேன்.

"தவமாய் தவமிருந்து" - எங்கள் வீட்டுக் கதை தான்! அண்ணன் பட்டயப் படிப்பு, நான் முதுநிலை பட்டதாரி! என்னுடைய தந்தையும் எனக்கு தான் நிறைய செய்தார். ஆனால் எனது அண்ணனும் அண்ணியும் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் கிடையாது.

அப்பா அப்படியே "முத்தையா" கதாபாத்திரம். அம்மாவும் எனக்குத்தான் செல்லம். நான் என் வீட்டின் இளவரசன்.

உங்களின இப்பதிவு வாயிலாக என் தாய், தந்தைக்கும், அண்ணன், அண்ணிக்கும் எனது வணக்கத்தோடு கூடிய நன்றிகள்.

சேரன் இந்தியாவின் "Roberto Benigni". னேரம் இருக்கும் பட்சத்தில், Roberto வின்
Life is beautiful
All about My Mother
Cinema Paradiso

பாருங்கள்.

முத்துகுமரன் said...

பரஞ்சோதி உங்கள் தாயார் உங்களை வளர்ப்பதற்கு எவ்வளவுசிரமப்பட்டிருக்கிறார்என்பது முன்பே அறிந்தவன் என்ற முறையில் உங்களுக்கு எந்தவிதமான தாக்கத்தை இந்தப்படம் ஏற்படுத்தி இருக்கும் என்பதை முழுமையாக உணரமுடிகிறது. உங்கள் தாயாரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒருவித நம்பிக்கையும் பெருமிதமும் வருகிறது. நீங்களே முன்பொருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள்
////எனக்கு சலிப்பு வரும் போது எல்லாம் என் அம்மாவின் உழைப்பை நினைத்து பார்ப்பேன், எனக்கு புத்துணர்ச்சி உண்டாகும்.//

அதை இப்போது நினைவு கொள்வது எனக்கு நிறைவாய் இருக்கிறது.

*நான் செய்திருப்பது விமர்சனம் இல்லை பரஞ்சோதி. எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தை அனுபவமாக பதிவு செய்திருக்கிறேன்*

நன்றி

முத்துகுமரன் said...

நன்றி பொட்டீக் கடை.

ஏராளமான குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளைத்தான் சேரன் கதையாக அமைத்திருந்தார். அதனால்தான் பலருக்கும் தங்கள் சொந்த வாழ்வை மீண்டுமொருமுறை திருப்பி பார்க்கும் வாய்ப்பாக அமைந்திருந்தது. சேரன் தடுமாறியதில் அவருடைய அண்ணியின் கதாபாத்திரித்தின் ஒரு சில செயல்களும் அடக்கம். வீட்டிற்கு வந்தவர்களுக்கு சாப்பாடு போடாமல் அனுப்பக்கூடிய மனநிலையில் எந்த பெண்களும் இல்லை என்றே கருதுகிறேன். தன் இல்லாளின் குணநலனை உயர்த்திப் பிடிக்க இன்னொரு கதாபாத்திரத்தை பலிகடாவாக்கிவிட்டார். மத்தபடி அவரின் அண்ணன் - அண்ணி தொடர்பான காட்சிகள் மிக இயல்பானவை. நான் எங்க வீட்டு செல்லம். அதனாலே என் தம்பி பலமுறை பாதிக்கப்பட்டு இருக்கிறான். இந்த உணர்வை என் நட்சத்திர வாரத்தில் தம்பிக்கொரு கவிதையிலும் சொல்லி இருந்தேன்.

இது திரை விமர்சனம் அல்ல பொட்டீகடை. இந்த படம் குறித்து வலைப்பூ நண்பர்களின் விமர்சனங்களுக்கு எப்படி தொடுப்பு கொடுப்பது என்றூ தெரியவில்லையே...

Sri Rangan said...

முத்துக்குமரன் வணக்கம்!

தங்களின் பதிவு, சேரனின் படத்துள் வாழ்ந்த எமது அப்பா,அம்மாவை வாழ்த்திக்கொண்டிருக்கிறது.

மிக அருமையாக நெகிழவைக்கும்படி எழுதுகிறீர்கள்!

வாழ்த்துக்கள்.

பெரும்பாலும் சேரனின் படங்கள் "தமிழ்ச் சினிமாவில்" அற்புதமான வகையில் மனித உணர்வுகள் குறித்து அசலாகப் பேசுவது.அதில் குறிப்பாக இந்தப்படம் முழுமையான வெற்றி பெறுகிறது.

அதற்கு உங்கள் பதிவே சாட்சி.

அன்புடன்
ஸ்ரீரங்கன்

G.Ragavan said...

முத்துக்குமரன், தவமாய்த் தவமிருந்து திரைப்படத்தை நானும் பார்த்தேன். மிகச் சிறப்பான படம் என்பதில் ஐயமேதுமில்லை. ஒவ்வொரு பிள்ளைக்கும் தன் தாய் தந்தையர் மீதான உரிமையை நிச்சயமாக ஒரு படி மேலேற்றியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

ரொம்பவே எளிமையான பாத்திரங்கள். ஆனால் ரொம்பவே கனமான உணர்வுகள். நல்ல கையாடல். சேரன் ஒரு சிறந்த இயக்குனர் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார்.

அத்தோடு உங்கள் பெற்றோர் மீதான உங்கள் அன்பும் பாசமும் என்னை நெகிழ வைக்கிறது. உங்களைப் பெற்ற தாயும் தந்தையும் நீங்கள் காட்டும் அன்பிற்கும் செய்யும் கடமைகளுக்கும் நிச்சயமாக பெருமிதம் கொள்ளலாம்.

Unknown said...

முத்துக்குமரன்., சேரனை விட., உங்களுடைய உணர்வுகள் ஆச்சரியப் படுத்துகிறது நண்பனே.

//எந்த வித எதிர்பார்ப்புமற்று எப்போதும் தியாகத்திற்கு தயாரக இருக்கும் அந்த தாய்மைக்கு எப்படிச் செய்வது கைமாறு. குற்ற உணர்வால் குறுகுறுத்து போய்விட்டேன்//.

//சேரனை இளைஞர்கள் மீது அக்கறை கொண்டிருக்கும் ஒரு மூத்த சகோதரனாகவே பார்க்கிறேன்//.

வார்த்தைகள் வரவில்லை., சண்டையில்லை., பன்ச் வசனமில்லை அப்படியும் நம் இளைஞர்களை உணர்வு கடலில் மிதக்கவிட்ட படம். இரு மகன்களும் தந்தையின் வறுமை நிலை பற்றிய உணர்வில்லாது இருப்பதாக காட்டியிருக்க வேண்டாமோ என எண்ணினாலும் மனம் நெகிழச் செய்த படம்.

___
//உங்களின இப்பதிவு வாயிலாக என் தாய், தந்தைக்கும், அண்ணன், அண்ணிக்கும் எனது வணக்கத்தோடு கூடிய நன்றிகள்.//

இதுதான் நம்ம சிங்கங்கள். எத்தனை உயரம் சென்றாலும் பணிவு. பதர்களின் நடுவில் தனித்து தெரியும் நெல்மணிகள்.

வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு.

தாயைப் புரிந்து கொள்ளாமை பற்றி (முன்னொரு காலத்திலே வலைப்பதிவு வைத்திருந்த)"ஷ்ரேயா" அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். வாசித்திருக்கிறீர்களா?

Muthu said...

மிக உருக்கமாக அனுபவித்து எழுதி இருந்தீர்கள்.மிக நன்று.

முத்துகுமரன் said...

//தங்களின் பதிவு, சேரனின் படத்துள் வாழ்ந்த எமது அப்பா,அம்மாவை வாழ்த்திக்கொண்டிருக்கிறது.//


மிக்க மகிழ்வாய் இருக்கிறது ஸ்ரீரங்கன்.

தங்கள் வருகைக்கும் உணர்வுப் பகிர்வுக்கும் எனது நன்றிகள்.

முத்துகுமரன் said...

//அத்தோடு உங்கள் பெற்றோர் மீதான உங்கள் அன்பும் பாசமும் என்னை நெகிழ வைக்கிறது.//

அது எல்லோரிடமும் இருப்பதுதானே ராகவன். பெற்றோர் மீதான பாசம் அனைவருக்குள்ளும் இருக்கும் பொதுவான குணம்தானே.

// உங்களைப் பெற்ற தாயும் தந்தையும் நீங்கள் காட்டும் அன்பிற்கும் செய்யும் கடமைகளுக்கும் நிச்சயமாக பெருமிதம் கொள்ளலாம். //
நான் இன்னும் என் கடமைகளை பெரிய அளவில் செய்துவிடவில்ல. தற்சமயத்திற்கு அவர்கள் மன அமைதியோடு இருக்க வைத்திருக்கிறேன். அவ்வளவுதான்.
என் கனவுகள் நனவாக இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

நன்றி ராகவன்

முத்துகுமரன் said...

//இதுதான் நம்ம சிங்கங்கள். எத்தனை உயரம் சென்றாலும் பணிவு. பதர்களின் நடுவில் தனித்து தெரியும் நெல்மணிகள்.//

நன்றி அப்படிப்போடு,

எனக்கத்தான் இப்போது வார்த்தை வரவில்லை. எந்த புற வடிவங்களும் மனிதனின் அடிப்படை உணர்வுகளை மாற்றிவிடமுடியாது. ஊருக்கே ராசாவானாலும் தாயிக்கு பிள்ளைதானே. அதை எந்த பதவிகளும் உயரங்களும் வந்து மாற்றிவிட முடியாது.

அன்பை பரிமாறிக் கொள்ளும் போது அது இரட்டிப்பாகிறது. அந்த வகையில் எனக்கு மிகுந்த மனநிறைவை இந்தப் பதிவு தருகிறது.

முத்துகுமரன் said...

//நல்ல பதிவு.

தாயைப் புரிந்து கொள்ளாமை பற்றி (முன்னொரு காலத்திலே வலைப்பதிவு வைத்திருந்த)"ஷ்ரேயா" அவர்கள் ஒரு பதிவு எழுதியிருந்தார். வாசித்திருக்கிறீர்களா? //

தங்கள் கருத்திற்கு நன்றி வசந்தன். ''ஷ்ரேயா'' அவர்களின் பதிவை வாசிக்கவில்லையே. சுட்டி இருந்தால் தாருங்களேன்.

முத்துகுமரன் said...

//மிக உருக்கமாக அனுபவித்து எழுதி இருந்தீர்கள்.மிக நன்று.//


நன்றி முத்து(தமிழினி).

ஜோ/Joe said...

Nenjai Alliya Padam!
We need to extend our support to cheran!

முத்துகுமரன் said...

நன்றி ஜோ.

சேரன் போன்ற கலைஞர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். மக்களின் வரவேற்பு மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

மு. சுந்தரமூர்த்தி said...

முத்துக்குமரன்,
ரொம்ப உணர்வுப்பூர்வமாய் எழுதியிருக்கிறீர்கள். படம் இன்னும் பார்க்கக் கிடைக்கவில்லை. பிற விமர்சனங்களும், உங்கள் பதிவும் விரைவில் பார்க்கத்தூண்டுகிறன.

முத்துகுமரன் said...

நன்றி சுந்தரமூர்த்தி, படம் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளையும் தெரிவியுங்கள்

Related Posts with Thumbnails